
அதிக வட்டி ஆசை, அபேஸ் ஆன காசு!
சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் நடிகர் சாய் சக்தி ஒரு புகாரைத் தந்துள்ளார். அதிக வட்டி தருவதாகச் சொல்லி சில லட்சங்களைத் தன்னிடமிருந்து ஏமாற்றி விட்டது ஒரு நிறுவனம் என அந்தப் புகாரில் தெரிவித்துள்ளார்.
சாய் சக்தியிடம் பேசிய போது, “அதிக வட்டிக்கு ஆசைப்பட்டு பணத்தை அவங்ககிட்ட முதலீடு செய்தது என் தப்புதான். ஆரம்பத்துல அஞ்சாறு மாசம் சொன்ன மாதிரியே வட்டி தந்தாங்க. பிறகு வட்டியும் வரலை. ஆளும் எஸ்கேப். வெளிநாட்டுக்குத் தப்பியோடி விட்டதாச் சொல்றாங்க. என்னை மாதிரியே பணத்தை இழந்தவங்க நிறையப் பேர் இருக்காங்க. சிலர் புகார் தர்றதுக்குத் தயங்கிட்டிருக்காங்க.
எங்ககிட்ட மோசடி செஞ்சுட்டு எஸ்கேப் ஆன கம்பெனி இடத்தை பெயரையெல்லாம் மாத்திட்டு அடுத்த மோசடியை ஆரம்பிச்சுட்டதா தகவல் வந்தது. அதனாலதான் இனிமேலாவது யாரும் இவங்களால் பாதிக்கப்படக் கூடாங்கிறதுக்காகவே நான் புகார் கொடுத்திருக்கேன். காவல்துறை இந்தப் புகார் மீது நடவடிக்கை எடுத்து பணத்தை இழந்த எங்களுக்கு அதை மீட்டுத் தரணும்னு கோரிக்கை வைக்கிறேன்” என்றார்.