நாட்டில் யானை – மனித எதிர்கொள்ளல்கள் அதிகம் நிகழும் பகுதிகளில் நீலகிரி மாவட்டம், கூடலூர் முக்கிய பகுதியாக இருக்கிறது. கடந்த 200 ஆண்டுகளுக்கும் மேலாக யானைகளின் வாழிடங்களும் வழித்தடங்களும் தொடர்ந்து துண்டாடப்படுவதால் உணவு, தண்ணீர், இனப்பெருக்கம் உள்ளிட்ட அடிப்படைத் தேவைகளுக்காக இடம்பெயர முடியாமல் யானைகள் திணறி வருகின்றன. அதேவேளையில், போக்கிடம் தெரியாமல் தவிக்கும் யானைகளின் பிடியில் சிக்கி அப்பாவி பழங்குடிகளும் தோட்ட தொழிலாளர்களும் பரிதாபமாக உயிரிழந்து வருகின்றனர்.

இந்த நிலையில், தற்போது முதன்முறையாக நீலகிரியில் உள்ளூர் இளைஞர் பட்டாளத்தையும் யானைகள் பாதுகாப்புப் படையில் இணைத்திருக்கிறது வனத்துறை. குடியிருப்பு பகுதிகளில் யானைகளின் நடமாட்டத்தைக் கண்காணிக்கும் இந்த இளைஞர்கள், வனத்துறைக்கு உடனே தகவல்களைப் பகிர உள்ளனர். மேலும் உள்ளூர் மக்களிடமும் யானை நடமாட்டம் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தி, உஷார்படுத்த உள்ளனர். கட்டுப்படுத்த முடியாத அளவிற்கு அதிகரித்து வரும் யானை- மனித எதிர்கொள்ளல்களை இதன் மூலம் குறைக்க முடியும் என கூடலூர் வனத்துறை அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.