பீகார் சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியாகி 5 மாதங்கள்தான் ஆகிறது. அதற்குள் இரண்டாவது முதல்வராகவும், பீகார் மாநிலத்தின் முதல் பா.ஜ.க முதல்வராகவும் சாம்ராட் சௌத்ரி இன்று பதவியேற்றுக்கொண்டார்.
இதன் மூலம், “கூட்டணி இணக்கத்தைப் பேணிக்காத்துக்கொண்டே, தன் ஆதிக்கத்தையும் தக்கவைத்துக்கொள்ளவது எப்படி?’ என மீண்டும் ஒருமுறை அரசியல் வகுப்பெடுத்திருக்கிறது பா.ஜ.க. அதே நேரம் பா.ஜ.க-வின் இந்த அரசியல் விளையாட்டு ஏற்கெனவே மகாராஷ்டிராவில் தேவேந்திர பட்னாவிஸ் மீண்டும் முதலமைச்சராகப் பொறுப்பேற்றபோது நிகழ்ந்த நிகழ்வுகளையே மனக்கண்ணில் பிரதிபளிக்கிறது.
பீகாரில் பா.ஜ.க காலூன்றிய வரலாறைப் பார்க்கலாம்.

2000-களின் பெரும்பகுதி முழுவதும், பீகார் அரசியலில் பா.ஜ.க மிக அமைதியான கூட்டணியாகவே செயல்பட்டு வந்தது. குறிப்பாக பீகார் முதல்வர் நிதிஷ் குமாரின் நம்பிக்கையை சம்பாதிப்பதையும், அவர் கட்டமைத்த சாதி அடிப்படையிலான கூட்டணி பலத்தையுமே முழுவதும் சார்ந்திருந்தது. 2005, 2010 எனத் தொடர்ந்து தேர்தல்களில் அதிக இடங்களை வென்ற நிதிஷ்குமார்தான் கூட்டணியை முன்னின்று வழிநடத்தினார். 2014-ம் ஆண்டில் இந்த அரசியல் மெல்லச் சிதையத் தொடங்கியது.