எமெர்ஜென்சி ஃபண்ட், காப்பீடு, வீடு, கார், டிராவல் எல்லாத்தையும் முடித்து, 60 வயதிற்கு மேல் ‘அக்காடா’ என்று உட்காருவது தான் ஓய்வுக்காலம்.
அந்த ஓய்வுக்காலத்தை எப்படி சூப்பாராகத் திட்டமிடலாம் என்பதை விளக்குகிறார் நிதி நிபுணர் சுந்தரி ஜகதீசன்.
“60 வயது ஓடியாடி உழைத்துவிட்டு, கொஞ்சம் ரிலாக்ஸாக அமரும் காலம் தான் இந்த ஓய்வுக்காலம். இந்தக் காலத்திற்கான நிதியை இப்போதே திட்டமிடவில்லை என்றால், ரிலாக்ஸாக அமரும் காலத்திலும் ஓட வேண்டியதாக இருக்கும்.

அதனால், 25 – 32 வயதிற்குள் இதற்கான பிளானையும் திட்டமிடத் தொடங்கிவிடுவது நல்லது.
30 வயதிற்குள் எத்தனையைத் தான் திட்டமிடுவது என்று தோன்றும்தான். ஆனால், ஓய்வுக்காலத்திற்காக சிறிய தொகையைச் சேமிக்கத் தொடங்கலாம்.
முக்கால்வாசி கமிட்மென்ட் முடிந்ததும் தொகையை ஸ்டெப் அப் செய்துகொள்ளலாம்.
இந்த முதலீட்டைச் சீக்கிரம் தொடங்குவதில் ஒரு நன்மை உண்டு. அது தான் காம்பவுண்டிங்.
ஓய்வுக்காலத்திற்கான முதலீட்டில் பெரிய ரிஸ்க் எடுக்க வேண்டாம். அதனால், PPF, NPS, சீனியர் சிட்டிசன் சேமிப்பு திட்டம் போன்ற அரசு முதலீட்டு ஆப்ஷன்களுக்குச் சென்றுவிடலாம்.
மிகவும் சின்ன வயதிலேயே இந்த முதலீட்டைத் தொடங்கினால் மியூச்சுவல் ஃபண்ட்டில் முதலீடு செய்யலாம்.

உங்களுக்கு ஓர் ஆண்டிற்கு ஆகும் செலவுத்தொகையைக் கணக்கில் எடுத்துக்கொள்ளுங்கள். இதில் இப்போது நீங்கள் கட்டிக்கொண்டிருக்கும் இ.எம்.ஐ தொகைகளைச் சேர்க்காதீர்கள். காரணம், நீங்கள் உங்கள் ஓய்வுக்காலத்திற்கு முன் இந்தக் கமிட்மென்டை முடித்துவிடுவீர்கள்.
ஆனால், அதற்கு பதிலாக, மருத்துவச் செலவு போன்றவற்றைக் கணக்கு செய்து சேர்த்துக்கொள்ளுங்கள்.
இப்போது கணக்கு செய்திருக்கும் தொகை * பணவீக்க சதவிகிதமாக 6 சதவிகிதத்தைக் கணக்கு செய்து, அந்தத் தொகை * 25 என்று கணக்குப் போட்டுக்கொள்ளுங்கள்.
இங்கே 25 என்பது நீங்கள் ஓய்வுக்காலத்திற்குப் பின் வாழும் காலமாக கணக்கிடும் ஆண்டுகள் ஆகும்.
ஓய்வுக்காலத்தின் நிதியை மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்திருந்தால், ஓய்வு பெறுவதற்கு 2 – 3 ஆண்டுகளுக்கு முன்பு டெப்ட் ஃபண்டில் மாற்றிவிடுங்கள்.
காரணம், இந்த நிதியில் நாம் ரிஸ்க் எடுக்க முடியாது.
முடிந்தளவிற்கு, ஓய்வுக்காலத்திற்குள் ஒரு சொந்த வீடு இருப்பது நல்லது. இதன் மூலம், வாடகை ஒரு செலவு ஆவதைத் தடுக்கலாம்”.