
காவல்துறை மானியக் கோரிக்கை தொடர்பான விவாதத்தில் பேசிய உதயநிதி ஸ்டாலின், முதலமைச்சரின் நேரடி கட்டுப்பாட்டில் உள்ள காவல்துறை மற்றும் தமிழ்நாட்டின் சட்டம் ஒழுங்கு நிலவரம் குறித்து பல்வேறு விமர்சனங்களை முன்வைத்தார். இதற்கு தவெக அமைச்சர்கள் பதிலளித்த நிலையில், இரு தரப்புக்கும் இடையே வார்த்தைப் போர் ஏற்பட்டது. தொடர்ந்து, அவையில் பல்வேறு உறுப்பினர்கள் குறுக்கிட்டு பேசியதால் விவாதம் சூடுபிடித்தது.
இந்த நிலையில், தேமுதிக சார்பில் பிரேமலதா விஜயகாந்த் பேசுவதற்கு சபாநாயகர் அனுமதி வழங்கினார். அப்போது சட்டசபையில் நடைபெற்ற விவாதம் குறித்து அதிருப்தி தெரிவித்த பிரேமலதா, “இது சட்டமன்றமா.. சண்டைமன்றமா..” எனக் கூறினார். மேலும், காவல்துறைக்கான முக்கிய அறிவிப்புகளை எதிர்பார்த்து ஆயிரக்கணக்கான காவலர்கள் காத்திருப்பதாகவும், அவர்களுக்கான அறிவிப்புகள் வெளியாக வேண்டிய நிலையில், அவையில் தேவையற்ற வாக்குவாதங்கள் நடைபெறுவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
தொடர்ந்து, காவல்துறையின் அடையாளமாக வாழ்ந்தவர் கேப்டன் விஜயகாந்த் என்றும் பிரேமலதா குறிப்பிட்டார். மேலும், இன்னும் பல உறுப்பினர்கள் பேச வேண்டியிருப்பதால் அனைவருக்கும் உரிய நேரம் வழங்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
இதனிடையே, உதயநிதி ஸ்டாலின் நீண்ட நேரம் பேசியதாக பிரேமலதா குறிப்பிட்டபோது, எழுந்த உதயநிதி, தான் இரண்டு மணி நேரம் பேசவில்லை என்றும், குறைந்த நேரமே பேசியதாகவும் விளக்கம் அளித்தார். தான் சுமார் 35 நிமிடங்கள் மட்டுமே பேசியதாக பிரேமலதாவிடம் தெரிவித்தார். இதையடுத்து, உதயநிதி பேசிய நேரம் குறித்து சபாநாயகரும் விளக்கம் அளித்ததால் அவையில் மீண்டும் சிரிப்பும் பரபரப்பும் ஏற்பட்டது.
இந்த நிலையில், பிரேமலதா பேச்சின்போது குறுக்கிட்ட அமைச்சர் கீர்த்தனா, “இதே மாதிரி கேப்டன் விஜயகாந்திற்கு நடந்திருந்தா, அவங்களும் கண்டிப்பா எழுந்துநின்னு பேசி இருப்பாங்க..” என்று தேவையில்லாமல் விஜயகாந்தை இழுத்துவிட்டார்.
அமைச்சர் கீர்த்தனாவின் பேச்சுக்கு உடனே பதிலடி கொடுத்த பிரேமலதா, ”கேப்டன் இருந்தபோது நான் அப்போ அவையில் இல்லை.. அன்னைக்கு அவையில இருந்தவர்களுக்கு தெரியும்.. கேப்டன் அன்னைக்கு சொன்னது, ஏன் பால் கட்டணம் மற்றும் பஸ் கட்டண விலை உயர்வு என்று கேட்டார்.. அது திசை திருப்பப்பட்டு எங்கெங்கோ சென்று அதற்குபிறகு சண்டையாக மாறியது வரலாறு… அதனால் மீண்டும் அந்த வரலாறு திரும்பனுமா? மாற்றம் கொண்டு வருவோம் என்று சொன்ன நீங்கள், மாற்றத்தை கொடுக்கனுமா என்பதுதான் கேள்வி. நீங்க சொல்வது தவறு என்று சொல்லவில்லை. உங்க கருத்தை நீங்கள் சொல்கிறீர்கள். எதிர்க்கட்சி அவர்களுடைய கருத்தை சொல்கிறார்கள்..” என்று கூறினார்.