Cricket
oi-Yogeshwaran Moorthi
லண்டன்: இங்கிலாந்து அணிக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியில் இந்திய அணியின் கேப்டன் சுப்மன் கில் 84 பந்துகளில் 77 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்திருக்கிறார். இதன் மூலமாக நடப்பாண்டில் 8 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ள சுப்மன் கில், 6 அரைசதங்களை விளாசி அசத்தி இருக்கிறார்.
இங்கிலாந்து அணிக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியில் இந்திய அணி விளையாடி வருகிறது. இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய இங்கிலாந்து அணி 50 ஓவர்களில் 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 387 ரன்களை குவித்தது. இதன்பின் இந்திய அணிக்காக சுப்மன் கில் – ரோகித் சர்மா கூட்டணி தொடக்கம் கொடுத்தது. ரோகித் சர்மா மீது கொஞ்சம் அழுத்தம் இருந்ததால், சுப்மன் கில் பொறுப்பை எடுத்து கொண்டார்.

7வது ஓவருக்கு பின் ரோகித் சர்மா அதிரடியில் இறங்கினாலும், சுப்மன் கில்லை இங்கிலாந்து அணியால் கட்டுப்படுத்த முடியவில்லை. ஒவ்வொரு ஓவரிலும் ஒரு பவுண்டரியை விளாச வேண்டும் என்பதில் சுப்மன் கில் தீவிரமாக இருந்தார். அதனை களத்திலும் செய்து காட்டினார். இதனால் 53 பந்துகளில் சுப்மன் கில் தனது அரைசதத்தை எட்டினார்.
சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் சுப்மன் கில் அடிக்கும் 20வது அரைசதம் இதுவாகும். டி20 மற்றும் டெஸ்ட் கிரிக்கெட்டில் சுப்மன் கில் பேட்டிங் மீது விமர்சனங்கள் எழுந்தாலும், ஒருநாள் கிரிக்கெட்டில் விராட் கோலியின் ஜூனியர் என்பதை சுப்மன் கில் நிரூபித்து கொண்டே இருக்கிறார். அதற்கேற்ப நடப்பாண்டில் மட்டும் சுப்மன் கில் மொத்தமாக 8 ஒருநாள் போட்டிகளில் விளையாடி இருக்கிறார்.
அதில் ஒரு சதம் மற்றும் 5 அரைசதங்கள் என்று சுப்மன் கில் அசுரத்தனமான ஃபார்மில் இருக்கிறார். இன்னும் ஓராண்டில் தென்னாப்பிரிக்காவில் உலகக்கோப்பை தொடர் நடக்கவுள்ள நிலையில், சுப்மன் கில்லின் ஃபார்ம் ரசிகர்களிடையே பாராட்டுக்களை பெற்று வருகிறது. இதனால் சுப்மன் கில் கேப்டன்சிக்கான தேர்வையும் நியாயப்படுத்தி உள்ளதாக பார்க்கப்படுகிறது.
இங்கிலாந்து ஒருநாள் தொடர் தொடங்குவதற்கு சில வாரங்களுக்கு முன்பே வந்துவிட்ட சுப்மன் கில், இங்கிலாந்தின் தட்ப வெட்ப சூழலுக்கு ஏற்றவாறு தயாராகி வந்தார். அதேபோல் விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா ஆகியோருடன் இணைந்து பயிற்சியிலும் ஈடுபட்டார். இதனால் சுப்மன் கில் சிறந்த ஃபார்மை தொடர்ந்து வருவதாக ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.