Cricket
oi-Yogeshwaran Moorthi
லண்டன்: லார்ட்ஸ் மைதானத்தில் நடந்த ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் இந்திய அணிக்காக சதம் விளாசிய முதல் வீரர் என்ற சாதனையை ரோகித் சர்மா படைத்துள்ளார். ரோகித் சர்மா ஓய்வு பெறப் போவதாக சொல்லப்பட்ட நிலையில், முக்கியமான போட்டியில் சதம் விளாசி மிகப்பெரிய கம்பேக்கை கொடுத்துள்ளார்.
இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான கடைசி ஒருநாள் போட்டி லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய இங்கிலாந்து அணி 50 ஓவர்களில் 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 387 ரன்களை குவித்தது. அதிரடியாக ஆடிய பென் டக்கெட் 135 பந்துகளில் 141 ரன்களையும், பெத்தல் 93 பந்துகளில் 91 ரன்களையும், ஜோ ரூட் 74 ரன்களையும் விளாசினர்.

இதன்பின் 388 ரன்கள் என்ற இமாலய இலக்கை நோக்கி ரோகித் சர்மா – சுப்மன் கில் கூட்டணி களமிறங்கியது. தொடக்கத்தில் விக்கெட் கொடுக்க கூடாது என்பதால், ரோகித் சர்மா கூடுதல் நிதானத்துடன் ஆடினார். ஆனால் டங்க் வீசிய 8வது ஓவரில் 2 பவுண்டரி, ஒரு சிக்ஸ் விளாசி அதிரடியை தொடங்கினார். பின்னர் சாம் கரண் பவுலிங்கிலும் பவுண்டரி, சிக்ஸ் என்று விளாசி தள்ளினார்.
சிறப்பாக ஆடிய ரோகித் சர்மா 50 பந்துகளில் அரைசதத்தை எட்டினார். இதன்பின் ரோகித் சர்மா விண்டேஜ் ஆட்டத்தை ஆட தொடங்கினார். அதிலும் 70 ரன்களுக்கு மேல் விளாசிய பின், ரோகித் சர்மா அடுத்தடுத்து 2 சிக்சர்களை விளாசினார். இதன்பின் ரோகித் சர்மா 84 பந்துகளில் தனது 34வது சதத்தை விளாசி சாதனை படைத்துள்ளார்.
அதுமட்டுமல்லாமல் லார்ட்ஸ் மைதானத்தில் நடந்த ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் சதம் விளாசிய முதல் இந்திய வீரர் என்ற சாதனையை ரோகித் சர்மா படைத்துள்ளார். கடந்த சில நாட்களாகவே ரோகித் சர்மா ஓய்வை நோக்கி தள்ளப்படுவதாக பேசப்பட்டு கொண்டே இருந்தது. லார்ட்ஸ் மைதானத்தில் கடைசி கிரிக்கெட் போட்டியில் ரோகித் சர்மா விளையாடப் போகிறார் என்றெல்லாம் பேசப்பட்டது.
ஆனால் ரோகித் சர்மா தன் மீதான விமர்சனங்களுக்கு பேட் மூலமாக பதிலடி கொடுத்துள்ளார். அதிலும் இங்கிலாந்து அணி 388 ரன்கள் என்ற இமாலய இலக்கை இங்கிலாந்து அணி நிர்ணயித்த போது கொஞ்சம் கூட பதறாமல் சேஸிங்கை கட்டமைத்து கொடுத்திருப்பது ரசிகர்களிடையே கொண்டாடப்பட்டு வருகிறது.