கேரளம்: கனமழை, நிலச்சரிவு, வெள்ளத்தில் சிக்கி 9 பேர் பலி – சபரிமலைக்கு வரவேண்டாம் என அறிவிப்பு!

Spread the love

கேரள மாநிலத்தில் வெள்ளிக்கிழமை இரவு முதல் பெய்து வரும் தொடர் கனமழை பெரும் பேரழிவை ஏற்படுத்தியுள்ளது. மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவில் சிக்கி, உறங்கிக்கொண்டிருந்த தாய், மகன் உட்பட 9 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். ​கடலில் சீற்றம் காரணமாக படகுகள் கவிழ்ந்ததில் திருவனந்தபுரம் முதலப்பொழி மற்றும் விழிஞ்ஞம் பகுதிகளில் நான்கு பேரும், கொல்லம் தங்கசேரியில் ஒருவரும் மாயமாகியுள்ளனர். மேலும், கண்ணூர் காஞ்சிரப்புழா ஆற்றில் ஒருவர் தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டுள்ளார்.  பத்தனம்திட்டாவில் ​கனமழையால் முக்கிய ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு கிராமப்புறங்கள் நீரில் மூழ்கின. கோட்டயம், இடுக்கி மற்றும் கண்ணூர் மாவட்டங்களில் பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டது. பத்தனம்திட்டாவின் ரானி பகுதி வெள்ளத்தால் சூழப்பட்டு வெளி உலக தொடர்பை இழந்து தனிமைப்படுத்தப்பட்டுள்ளது. மாநிலம் முழுவதும் சுமார் 10 அணைகளின் மதகுகள் திறக்கப்பட்டுள்ளன. மலைப்பாதைகள் மற்றும் கணவாய் (Churam) பாதைகளில் போக்குவரத்து கடுமையாக கட்டுப்படுத்தப்பட்டும், சில இடங்களில் முழுமையாகவும் தடை செய்யப்பட்டுள்ளது.

நிலச்சரிவு

நிலச்சரிவு

மழைக்கு 127 வீடுகள் பகுதியாகவும், 17 வீடுகள் முழுமையாகவும் சேதமடைந்துள்ளன. நூற்றுக்கணக்கான வாகனங்கள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டன. மாநிலம் முழுவதும் அமைக்கப்பட்ட 65 நிவாரண முகாம்களில் 1,465 பேர் தங்கியுள்ளனர். காசர்கோடு முதல் பத்தனம்திட்டா வரையிலான மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. அதே சமயம் வானிலை ஆய்வு மையமும் அதிகாரிகளும் மழை முன்னறிவிப்பை முறையாக வழங்கவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *