
திருச்சூர் பூரத்திற்காக பட்டாசுகள் தயாரித்து வந்த ஐந்து வெடிமருந்துக் கிடங்குகளில் பெரும் வெடிவிபத்து ஏற்பட்டுள்ளது. அதில் இதுவரை 13 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 5 உடல்களும், மூன்று பேரின் உடல் பாகங்களும் மீட்கப்பட்டுள்ளன என்று திருச்சூர் மாவட்ட ஆட்சியர் ஷிகா சுரேந்திரன் தெரிவித்தார். திருச்சூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் படுகாயங்களுடன் அனுமதிக்கப்பட்டுள்ள 23 பேரில், ஐந்து பேர் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கவலைக்கிடமாக உள்ளவர்கள் 70 சதவீதம் முதல் 90 சதவீதம் வரை தீக்காயங்களுடன் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சாம்பிள் வெடிக்கட்டுக்கான பட்டாசுகள் தயாரித்தபோது இந்த விபத்து ஏற்பட்டதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.