கேரளாவில் கடந்த சில நாட்களாகவே பெய்து வரும் கனழையால் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு கோட்டயம்,பத்தனம்திட்டா,ஆலப்புழை போன்ற மாவட்டங்கள் தண்ணீரில் தத்தளிக்கின்றன. இதனால் பல இடங்களில் சாலை மற்றும் பாலங்களில் மழை வெள்ளம் சூழ்ந்து உள்ளதால் போக்குவரத்து மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் வாகன ஓட்டுநனர்களுக்கு மிகவும் சிரமம் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் மத்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,கேரளாவில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் மாநிலத்தில் பல இடங்களில் மேக வெடிப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மேலும் பத்தனம்திட்டா, கோட்டயம், ஆலப்புழை, இடுக்கி, எர்ணாகுளம், திருச்சூர், பாலக்காடு, மலப்புரம், கோழிக்கோடு, வயநாடு, கண்ணூர், காசர்கோடு உள்ளிட்ட 12 மாவட்டங்களுக்கு தீவிர மழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 24 மணி நேரத்தில் இந்த மாவட்டங்களில் 115மி.மீ.முதல் 204 மி.மீ வரை மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக கண்ணூர், பத்தனம்திட்டா ஆகிய மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

