வேட்டைக்காகப் பாய்ந்த வேகம், அடுத்த நொடியே ஒரு சிங்கத்தின் வாழ்வா சாவா போராட்டமாக மாறும் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை. குஜராத் மாநிலம், அம்ரேலி மாவட்டத்தில், ஒரு எருமை மாட்டை வேட்டையாட அந்த ஆசிய சிங்கம் மின்னல் வேகத்தில் துரத்தியது.
இருட்டில் இலக்கை மட்டுமே குறிவைத்து ஓடியதால், முன்னால் இருந்த 15 அடி ஆழ கிணற்றை அது கவனிக்கவில்லை. எருமை தப்பி ஓட, பாய்ந்த வேகத்தில் நிலைதடுமாறிய சிங்கம் நேராகக் கிணற்றுக்குள் விழுந்தது.
இருண்ட கிணற்றுக்குள் சிக்கிக்கொண்ட காட்டின் ராஜாவின் ஒவ்வொரு கர்ஜனையும், தன்னை மீட்கச் சொல்லி விடுத்த ஒரு கம்பீரமான அழைப்பாகவே அந்த கிராமம் எங்கும் எதிரொலித்தது.
தகவல் அறிந்ததும் அங்கு வந்த வனத்துறையினர், ஒரு நொடியும் தாமதிக்காமல் மீட்புப் பணியில் குதித்தனர். கிணற்றின் ஆழம் மற்றும் சிங்கத்தின் ஆக்ரோஷம் எனப் பல சவால்கள் இருந்தபோதிலும், அதிகாரிகள் மிகவும் சாமர்த்தியமாகச் செயல்பட்டனர். சுமார் ஒரு மணி நேரத் திக் திக் போராட்டத்திற்குப் பிறகு, கயிறுகள் மற்றும் இரும்புக் கூண்டுகளைப் பயன்படுத்தி அந்தச் சிங்கத்தைப் பத்திரமாக மேலே தூக்கினர்.
அதிர்ஷ்டவசமாக, அவ்வளவு ஆழத்தில் விழுந்தும் அந்தச் சிங்கத்திற்குச் சிறு காயம் கூட ஏற்படவில்லை.
மீட்கப்பட்டவுடன் அதற்குத் தேவையான மருத்துவப் பரிசோதனைகள் செய்யப்பட்டு, அது முழு ஆரோக்கியத்துடன் இருப்பது உறுதி செய்யப்பட்டது. மரணத்தின் பிடியில் இருந்து மீண்ட அந்த கம்பீர ராஜா, அன்று இரவே மீண்டும் காட்டின் அடர்ந்த பகுதிக்குள் பத்திரமாக விடுவிக்கப்பட்டான். மரணத்தின் விளிம்பு வரை சென்று, மனிதர்களின் துணையோடு மீண்டும் தன் சாம்ராஜ்யத்திற்குத் திரும்பிய அந்த சிங்கத்தின் கதை, ஒரு உண்மையான “சர்வைவல்’ த்ரில்லர்!