திருப்பூர் விஜய் பிரச்சாரம் கூட்டம் : வெயில் தாங்க முடியாமல் வேட்பாளர் உள்பட 10 மயக்கம் – Kumudam

Spread the love

தமிழக சட்டசபை தேர்தல் தேதி நெருங்க நெருங்க அரசியல் கட்சி தலைவர்களின் பிரசாரமும் அனல் பறக்க தொடங்கியுள்ளது. உங்கள் பொன்னான வாக்குகளை சிந்தாமல் சிதறாமல் இந்த சின்னத்துக்கு போடுங்கள் என வீடு வீடாக சென்று வேட்பாளர்கள் தீவிர வாக்கு சேகரிப்பிலும் ஈடுபட்டு வருகிறார்கள்.

இந்த முறை நடிகர் விஜய்யும் கட்சி ஆரம்பித்து தேர்தலை சந்திக்கிறார். இதனால் முதல்முறை தேர்தலில் பங்கேற்கும் தவெகவினரும் அனல் பறக்க பிரசாரம் மேற்கொண்டு வருகிறார்கள். விஜய்யை தங்கள் தொகுதிக்கு அழைத்து பிரச்சாரம் செய்ய வைத்தால் இன்னும் ஓட்டு எண்ணிக்கை அதிகரிக்கும் என தவெக வேட்பாளர்கள் கருதுகின்றனர்.

தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய்யோ ஒரு நாள் பிரசாரம் ஒரு நாள் ரெஸ்ட் என இருந்து வருகிறார். ஞாயிற்றுக்கிழமை கன்னியாகுமரியில் பிரசாரம் மேற்கொண்ட விஜய் நேற்று எங்கும் பிரசாரம் மேற்கொள்ளவில்லை. இந்த நிலையில் இன்று  விஜய் திருப்பூரில் பிரசாரம் மேற்கொள்ள இருக்கிறார். இதற்கான அனுமதியும் காவல்துறை தரப்பில் கொடுக்கப்பட்டுள்ளது. 

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள 8 தொகுதிகளிலும் த.வெ.க. சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து இன்று பிரசாரம் செய்வதற்காக விஜய் கோவை வந்தார். அங்கிருந்து சாலை மார்க்கமாக திருப்பூர் செல்லும் விஜய் வாகனத்தில் ஏறி மக்கள் உற்சாகப்படுத்தினார். இந்நிலையில், விஜயை பார்க்க காலை முதலே வெயிலில் காத்திருக்கும் ரசிகர்கள், தொண்டர்கள் அடுத்தடுத்து மயக்கம்; இதுவரை 6 பேர் ஆம்புலன்ஸில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர். கூட்டத்தில் இருப்போரும் வெயிலின் தாக்கம் தாங்க முடியாமல் தண்ணீர் கேட்டு வருகின்றனர். 

பெருமாநல்லூரில் விஜய்யை காண ஆயிரக்கணக்கானோர் கூடியதால் நெரிசல். 10 பேர் மயக்கம்.இதில் விஜயை வரவேற்க காத்திருந்த சூலூர் தவெக வேட்பாளர் சுகுமார் மயக்கம்- தொண்டர்கள் தண்ணீர் கொடுத்து தேற்றினர். இதனால் அப்பகுதியில் பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டது. பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார், தவெக நிர்வாகிகள் அங்கு திரண்டு இருந்த மக்களுக்கு தண்ணீர் கொண்டு வந்து கொடுத்து நிலைமையை சமாளிக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். 

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *