Cricket
oi-Yogeshwaran Moorthi
மும்பை: நியூசிலாந்து அணிக்கு எதிரான கடைசி 2 ஒருநாள் போட்டிகளில் ஸ்ரேயாஸ் ஐயர் கேப்டனாக செயல்பட உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. ஒருநாள் மற்றும் டெஸ்ட் தொடர்களுக்கு இடையில் வெறும் 3 நாட்கள் மட்டுமே இடைவெளி இருப்பதால், கேப்டன் சுப்மன் கில், பும்ரா, சிராஜ், பிரசித் கிருஷ்ணா, நிதிஷ் ரெட்டி, குல்தீப் யாதவ் உள்ளிட்டோர் டெஸ்ட் கிரிக்கெட் பயிற்சியில் ஈடுபட உள்ளனர்.
நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி 5 டி20, 5 ஒருநாள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாட உள்ளது. அக்டோபர் 22 முதல் நவம்பர் 1 வரை டி20 தொடரும், நவம்பர் 4 முதல் நவம்பர் 15 வரை ஒருநாள் தொடரும், நவம்பர் 19 முதல் 23 வரை முதல் டெஸ்ட் போட்டியும், நவம்பர் 27 முதல் டிசம்பர் 1 வரை 2வது டெஸ்ட் போட்டியும் நடக்கவுள்ளது.

டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு முன்பாக ஒருநாள் கிரிக்கெட்டை நடத்த திட்டமிட்டு அட்டவணையை தயார் செய்திருப்பது இந்திய அணிக்கு மிகப்பெரிய சிக்கலாக மாறி இருக்கிறது. ஏனென்றால் ஒருநாள் கிரிக்கெட் தொடருக்கும், டெஸ்ட் தொடருக்கும் இடையில் வெறும் 3 நாட்கள் மட்டுமே இருக்கிறது. மிகமுக்கிய டெஸ்ட் தொடருக்கு தயாராக வெறும் 3 நாட்கள் நிச்சயமாக போதாது.
இந்த 2 டெஸ்ட் போட்டிகளிலும் கட்டாயம் இந்திய அணி வெல்ல வேண்டிய சூழல் இருக்கிறது. இந்திய அணி நிர்வாகத்துடன் அட்டவணையை தயார் செய்யும் குழு முறையாக ஆலோசிக்கவில்லை என்று தெரிகிறது. முதலில் ஒருநாள் கிரிக்கெட் தொடரையும், பின் டி20 தொடரையும் நடத்தினால், இந்திய அணிக்கு எந்த சிக்கலும் இருக்காது.
டெஸ்ட் அணியில் விளையாடும் பும்ரா, சிராஜ், பிரசித் கிருஷ்ணா, கேப்டன் சுப்மன் கில், கேஎல் ராகுல், நிதிஷ் ரெட்டி, முகமது சிராஜ் உள்ளிட்டோர் ஒருநாள் அணியிலும் தேர்வாகி இருக்கின்றனர். இதனால் இந்த வீரர்கள் அனைவரையும் கடைசி 2 ஒருநாள் போட்டிகளில் இருந்து விலக்கி வைக்க பயிற்சியாளர் கம்பீர் தலைமையிலான குழு முடிவு செய்திருக்கிறது.
சுப்மன் கில் இடத்தில் கேப்டனாக ஸ்ரேயாஸ் ஐயர் செயல்படவும், மாற்று வீரர்களை அழைத்து செல்லவும் திட்டமிடப்பட்டிருக்கிறது. அந்த நேரத்தில் வெலிங்டனில் இந்திய அணி வீரர்கள் பயிற்சியாளர் கம்பீர் தலைமையில் தயாராகவும் திட்டமிடப்பட்டிருக்கிறது. ஒருநாள் அணிக்கு பவுலிங் பயிற்சியாளர் மோர்க்கல் தலைமையிலான குழு பயிற்சி கொடுக்கவும் ஆலோசிக்கப்பட்டிருக்கிறது.