கொரோனாவுக்கே tough கொடுக்கும் எபோலா… பீதியில் உலக நாடுகள்! இன்னொரு ரவுண்டை இந்தியா தாங்குமா?

Spread the love

கிட்டத்தட்ட ஆறு வருடங்களைக் கடந்துவிட்டோம். ஆனால், இன்னும்கூட கோவிட் தொற்று ஏற்படுத்திய பாதிப்புகள், இழப்புகளில் இருந்து முழுமையாக மீள முடியவில்லை. ஒவ்வொரு வீட்டிலும் கோவிட் தன் கோர தாண்டவத்தை ஆடித் தீர்த்த கதைகள் நிச்சயம் இருக்கும். உயிர், வாழ்வாதாரம், உறவுகள் என ஒவ்வொருவரும் எத்தனையோ இழப்புகளைச் சந்தித்தார்கள். கோவிட் பயத்திலிருந்தே முழுமையாக மீள முடியாத நிலையில், புதிதாக இன்னொரு பீதி கிளம்பியிருக்கிறது. எபோலா வைரஸ் எனப்படும் அது, கோவிட் தொற்றுக்கே டஃப் கொடுக்கும் அளவுக்கு கொடூரமானது என்பதுதான் கவனிக்கத்தக்க, கவலைக்குரிய விஷயம்.

காங்கோ, உகாண்டா, தெற்கு சூடான் ஆகிய நாடுகளில் எபோலா வைரஸ் பாதிப்பு தீவிரமடைந்து வருகிறது.

காங்கோ, உகாண்டா, தெற்கு சூடான் ஆகிய நாடுகளில் எபோலா வைரஸ் பாதிப்பு தீவிரமடைந்து வருகிறது. இதனால், ஆப்பிரிக்க நாடுகளுக்குப் பயணங்களைத் தவிர்க்கவும், வெளிநாடுகளில் இருந்து  வரும் பயணிகளுக்குப் பாதிப்பு ஏதேனும் உள்ளதா என்பதைக் கண்காணிக்கவும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சிகிச்சை அளிக்கவும்  அரசு பொது மருத்துவமனைகளுக்கு மத்திய சுகாதாரத்துறை அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது

இந்தியாவில் இதுவரை எபோலா வைரஸ் பரவல் கண்டுபிடிக்கவில்லை என்பது சற்றே ஆறுதலான செய்தியாக இருந்தாலும், ஒருவேளை இது பரவ ஆரம்பித்தால் கொரோனாவுக்கே டஃப் கொடுக்கும் அளவுக்கு கோரதாண்டவம் ஆடும் என்பது பீதியைக் கிளப்புகிறது.

எபோலா வைரஸ் குறித்த தகவல்கள், அந்தத் தொற்றின் அறிகுறிகள், தடுப்பு நடவடிக்கைகள் குறித்து விளக்கமாகப் பேசுகிறார் சென்னையைச் சேர்ந்த தொற்றுநோய் சிகிச்சை சிறப்பு மருத்துவர் குமாரசாமி

டாக்டர் குமாரசாமி

புண்டிபிகோ வைரஸ்… இது நாலாவது வகை!

”இப்போது பரவிக் கொண்டிருக்கும் இந்த ‘எபோலா’ (Ebola) நோயானது, ஒரு குறிப்பிட்ட வைரஸ் குழுவினால் ஏற்படுகிறது. இதற்கு ‘ஆர்த்தோ எபோலா வைரஸ்’ (Orthoebolavirus) என்று பெயர்; முன்னதாக இதை  ‘எபோலா வைரஸ்’ என்று அழைத்து வந்தனர்.

இதில் நான்கு வகையான வைரஸ்கள் உள்ளன. அதில் ஒன்றுதான் எபோலா வைரஸ். இது இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ஆப்பிரிக்க நாடுகளில் ஒரு பெரிய கொள்ளைநோயை (Epidemic) ஏற்படுத்தியது.

தற்போது புதிதாகக் கண்டறியப்பட்டுள்ள நான்காவது வகைக்கு ‘புண்டிபிகோ வைரஸ்’ (Bundibugyo virus) என்று பெயர். இந்த புண்டிபிகோ வைரஸ்தான்  தற்சமயம் ஆப்பிரிக்காவின் காங்கோ (Congo) மற்றும் உகாண்டா (Uganda) ஆகிய நாடுகளில் புதிதாகப் பரவி வருகிறது. இதனால் பாதிக்கப்பட்டவர்கள் உயிரிழந்தும் வருகின்றனர். இது தீவிரமான வைரஸ் நோய்த்தொற்று என்பது குறிப்பிடத்தக்கது.

இப்படித்தான் பரவும்…

இந்நோய் பாதிக்கப்பட்டவரின் உடல் திரவங்களுடன் (Body secretions) நேரடியாகத் தொடர்பு ஏற்படும்போது அது மற்றவர்களுக்கும் பரவுகிறது. நம் கைகளிலோ அல்லது பாதங்களிலோ, சருமத்தில் ஏதேனும் கீறல்களோ அல்லது காயங்களோ (Skin break) இருந்தால், இந்த வைரஸ் அந்தப் பகுதியின் வழியாக உடலுக்குள் நுழைந்துவிடும். பாதிக்கப்பட்டவரின் ரத்தம், சிறுநீர், மலம், உமிழ்நீர்  அல்லது விந்து திரவம் ஆகியவற்றுடன் காயம் உள்ள சருமப் பகுதி நேரடியாகத் தொடர்பு கொள்ளும்போது இந்நோய் பரவுகிறது. எனவே, இந்நோயால் பாதிக்கப்பட்ட ஒருவரின் உடல் திரவங்களில் இந்த வைரஸ் இருந்தால், அது மற்றொருவருக்கு மிக எளிதாகப் பரவக்கூடும். கோவிட் வைரஸ் காற்றில் பரவியது போல எபோலா வைரஸ் காற்றில் பரவாது. இது முற்றிலும் நேரடித் தொடர்பு (Direct contact) மூலமாக மட்டுமே பரவக்கூடியது.

கோவிட் வைரஸ் காற்றில் பரவியது போல எபோலா வைரஸ் காற்றில் பரவாது. இது முற்றிலும் நேரடித் தொடர்பு (Direct contact) மூலமாக மட்டுமே பரவக்கூடியது.

அறிகுறிகள் இருந்தால் அலெர்ட்!

ஒருவருக்கு இந்த வைரஸ் பாதிப்பு ஏற்பட்டால், அவருக்கு 2 முதல் 21 நாள்களுக்குள் நோய்க்கான அறிகுறிகள் வெளியே தெரியத் தொடங்கும் என்று ஆய்வுகள் கூறுகின்றன.

காய்ச்சல், கடுமையான உடல் வலி, கடுமையான சோர்வு மற்றும் பலவீனம் ஆகியவை இதன் ஆரம்ப அறிகுறிகளாகும்.  நாள்கள் செல்லச் செல்ல நோயாளியின் நிலைமை மோசமடைந்து, கடுமையான வயிற்றுப்போக்கு மற்றும் வாந்தி ஏற்படும். நோயின் இறுதிநிலையில் மூக்கு, கண், சிறுநீர், மற்றும் சருமத்துக்கு அடியில் என உடலின் பல்வேறு பகுதிகளில் இருந்து காரணமில்லாமல் ரத்தப்போக்கு (Unexplained bleeding) ஏற்படும். இத்தகைய கடுமையான பாதிப்புகளால் உடலின் முக்கிய உறுப்புகள் செயலிழந்து (Organ failure) நோயாளிகள் உயிரிழக்க நேரிடுகிறது.

எப்படிக் கண்டுபிடிப்பார்கள்?

இந்நோயைக் கண்டறிவதற்கு என்று பிரத்யேகமான சோதனைகள் உள்ளன. இதை  சாதாரண மருத்துவமனைகளிலோ அல்லது ஆய்வகங்களிலோ கண்டறிய முடியாது. குறிப்பிட்ட ஆராய்ச்சி மையங்களில் மட்டும்தான் இதற்கான மூலக்கூறு சோதனை (Molecular test) அதாவது பி.சி.ஆர் (PCR) சோதனை வசதி உள்ளது. நோயாளிகளின் ரத்தம் அல்லது உடல் திரவங்களைச் சேகரித்து இச்சோதனை மூலம் வைரஸ் பாதிப்பை உறுதி செய்யலாம்.

சிகிச்சைகளே இல்லை…

 தற்போது பரவி வரும் இந்த எபோலா (புண்டிபிகோ) வைரஸிற்கு என்று இதுவரை பிரத்யேகமான மருந்துகள் அல்லது சிகிச்சைகள் எதுவும் கண்டறியப்படவில்லை. நோயாளிகளுக்கு அவர்களின் அறிகுறிகளைப் பொறுத்து ‘துணை சிகிச்சை’ (Supportive treatment) மட்டுமே வழங்கப்படுகிறது. 

இந்நோயால் பாதிக்கப்பட்டு ஒருவர் இறந்துவிட்டால், அவரது இறுதிச் சடங்கின்போது உடலைக் கையாளுபவர்களுக்கும் இந்நோய் பரவ வாய்ப்புள்ளது.

அதாவது, சோர்வு மற்றும் காய்ச்சலைக் குறைப்பதற்கான சிகிச்சைகள், ரத்தப்போக்கைத் தடுப்பதற்கான சிகிச்சைகள் மற்றும் உறுப்புகள் செயலிழக்காமல் இருப்பதற்கான  சிகிச்சைகள் மட்டுமே அளிக்கப்படுகின்றன. மேலும், பாதிக்கப்பட்டவரின் உடல் திரவங்கள் மற்றவர்கள் மீது படாமல் இருக்க நோயாளிகளைத் தனிமைப்படுத்துவது (Isolation) மிக அவசியமாகும்.

இந்நோயால் பாதிக்கப்பட்டு ஒருவர் இறந்துவிட்டால், அவரது இறுதிச் சடங்கின்போது உடலைக் கையாள்பவர்களுக்கும் இந்நோய் பரவ வாய்ப்புள்ளது. எனவே, மிக எச்சரிக்கையாக, சிறப்புப் பாதுகாப்பு வழிமுறைகளைப் பின்பற்றித்தான் இறுதிச் சடங்குகளைச் செய்ய வேண்டும்.

இந்நோயைத் தடுப்பதற்கான தடுப்பூசிகளும் (Vaccine) இதுவரை கண்டறியப்படவில்லை. எனவே, இந்நோய்க்கான ஒரே தீர்வு தனிமைப்படுத்துதல் மட்டுமே. பாதிக்கப்பட்டவர்களைத் தனியாகப் பிரித்து வைத்துப் பராமரிப்பதும், அவர்களுக்குச் சிகிச்சை அளிக்கும்போது முறையான பாதுகாப்பு உடைகளை அணிந்து உடல் திரவங்கள் படாமல் பார்த்துக் கொள்வதும் மிகவும் முக்கியம்.

வௌவால்களிடம் இருந்து விலகி இருக்கவும்! 

இந்த வைரஸ் கிருமியானது வௌவால்கள் (Bats) மூலமாகவும் பரவக்கூடும் என்று சில அறிக்கைகள் தெரிவிக்கின்றன. எனவே, வௌவால்களின் நேரடித் தொடர்பையோ அல்லது அவற்றின் எச்சங்கள் உள்ள இடங்களைத் தொடுவதையோ இந்தச் சமயத்தில் தவிர்க்க வேண்டும். எனினும், பிரதானமாக இந்நோய் பாதிக்கப்பட்ட மனிதர்களின் உடல் திரவங்கள் மூலமாகவே ஒருவரிடமிருந்து மற்றொருவருக்குப் பரவுகிறது.

வௌவால்

இந்தியாவில் இருக்கிறதா?

தற்போது காங்கோ (Democratic Republic of the Congo) மற்றும் உகாண்டா ஆகிய இரண்டு ஆப்பிரிக்க நாடுகளில்தான் இந்நோய் தீவிரமாகப் பரவி வருகிறது. இந்த நோய் தீவிரமடைந்தால், பாதிக்கப்பட்டவர்களில் 30% பேர் இறப்பதற்கான வாய்ப்புகள்  உள்ளன. எனினும், தகுந்த நேரத்தில் முறையான துணை சிகிச்சைகள் அளிக்கப்பட்டால் நோயாளிகளின் உயிரைக் காப்பாற்ற முடியும். இது மிகவும் ஆபத்தான ஒரு வைரஸ் என்பது மட்டும் நினைவில் இருக்க வேண்டும்.

 ஆப்பிரிக்க நாடுகளிலிருந்து விமானம் மூலம் இந்தியாவிற்கு வருபவர்களை விமான நிலையங்களிலேயே அரசு, தீவிரமாகப் பரிசோதித்து (Screening) வருகிறது. இந்தியாவில் இதுவரை ஒருவருக்குக் கூட இந்நோய் உறுதி செய்யப்படவில்லை. எனினும் உடல்நலம் சார்ந்த எந்த அறிகுறியையும் அலட்சியம் செய்யாமல் உடனே மருத்துவ ஆலோசனை பெறுவது எப்போதுமே, எல்லோருக்குமே பாதுகாப்பானது” என்று எச்சரிக்கிறார் டாக்டர் குமாரசாமி.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *