கொளத்தூர் தொகுதி வழக்கு: இன்று வெளியாகும் முக்கிய தீர்ப்பு! – Kumudam

Spread the love

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் சென்னை கொளத்தூர் தொகுதி தொடர்பாக தாக்கல் செய்யப்பட்டுள்ள தேர்தல் வழக்கில், தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தாக்கல் செய்த மனு மீது சென்னை ஐகோர்ட்டு இன்று தீர்ப்பு வழங்க உள்ளது. இதனால் அரசியல் வட்டாரத்தில் இந்த வழக்கு மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

கொளத்தூர் தொகுதியில் ஏற்பட்ட மாற்றம் :

சட்டமன்றத்  தேர்தலில் சென்னை கொளத்தூர் தொகுதியில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் போட்டியிட்டார். ஆனால், அந்தத் தேர்தலில் அவர் தோல்வியை சந்தித்தார்.  இந்த தொகுதியில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் போட்டியிட்ட வி.எஸ்.பாபு வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டார்.

தேர்தல் முடிவுகள் வெளியான பின்னர், வெற்றி பெற்ற வேட்பாளரின் தேர்தலை எதிர்த்து வழக்கு தொடருவதற்கு மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின் கீழ் குறிப்பிட்ட கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. அதன்படி, தேர்தல் முடிவு வெளியான 45 நாட்களுக்குள் தேர்தல் வழக்கு தாக்கல் செய்ய வேண்டும்.

45 நாட்கள் கால அவகாசம் தொடர்பான விவகாரம் :

இந்நிலையில், கொளத்தூர் தொகுதியில் வெற்றி பெற்ற வி.எஸ்.பாபுவின் வெற்றியை எதிர்த்து மு.க.ஸ்டாலின் நிர்ணயிக்கப்பட்ட 45 நாட்களுக்குள் தேர்தல் வழக்கை தாக்கல் செய்யவில்லை என்ற விவகாரம் முக்கிய அம்சமாக மாறியது.

இதையடுத்து, காலதாமதத்தை ஏற்றுக்கொண்டு வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொள்ள வேண்டும் என சென்னை ஐகோர்ட்டில் மு.க.ஸ்டாலின் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

வாக்கு எந்திரங்களில் முறைகேடு புகார் :

கொளத்தூர் தொகுதியில் பயன்படுத்தப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் முறைகேடுகள் நடைபெற்றதாக புகார்கள் எழுந்ததாக தெரிவிக்கப்பட்டது. இதன் அடிப்படையில், தேர்தல் முடிவை எதிர்த்து மு.க.ஸ்டாலின் தரப்பில் தேர்தல் வழக்கு தொடரப்பட்டது.

மேலும், 45 நாட்கள் காலக்கெடுவை கடந்து வழக்கு தாக்கல் செய்ததற்கான காரணங்களை கருத்தில் கொண்டு, காலதாமதத்தை மன்னித்து வழக்கை தொடர்ந்து விசாரிக்க அனுமதிக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைக்கப்பட்டது.

இன்று காலை தீர்ப்பு :

இந்த வழக்கை சென்னை ஐகோர்ட்டு தலைமை நீதிபதி எஸ்.ஏ.தர்மாதிகாரி மற்றும் நீதிபதி ஜி.அருள்முருகன் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது. விசாரணை முடிவடைந்த நிலையில், தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் வழக்கு ஒத்திவைக்கப்பட்டது.

இந்நிலையில், இந்த வழக்கில் இன்று (வியாழக்கிழமை) காலை 10.30 மணிக்கு நீதிபதிகள் தீர்ப்பு வழங்க உள்ளனர்.

மு.க.ஸ்டாலின் தாக்கல் செய்த மனு ஏற்கப்படுமா அல்லது வழக்கு தொடர்ந்து விசாரிக்கப்படுமா என்பது குறித்து வெளியாக உள்ள தீர்ப்பை தி.மு.க.வினர் மற்றும் அரசியல் கட்சிகள் எதிர்நோக்கி உள்ளனர்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *