Cricket
oi-Yogeshwaran Moorthi
மும்பை: இந்திய அணியின் முன்னணி ஆல்ரவுண்டராக வலம் வந்த ரவிச்சந்திரன் அஸ்வின் தன்னுடைய அடுத்த திட்டம் குறித்து மனம் திறந்துள்ளார். தற்போது ஐரோப்பா டி20 லீக் தொடரில் டப்ளின் கார்டியன்ஸ் அணியின் கேப்டன் மற்றும் பயிற்சியாளராக அஸ்வின் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இந்த அணியின் உரிமையாளர் ராகுல் டிராவிட் தான். இது ரசிகர்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்திய அணியின் ஜாம்பவான் வீரரான ரவிச்சந்திரன் அஸ்வின், ஐபிஎல் தொடரின் ஓய்வுக்கு பின் வெளிநாடுகளில் நடந்து வரும் லீக் போட்டிகளில் கவனம் செலுத்தி வருகிறார். ஏற்கனவே ஆஸ்திரேலியாவில் பிக் பேஷ் லீக் தொடர் மற்றும் எம்எல்சி ஆகிய தொடர்களில் அஸ்வின் விளையாடி வருகிறார். தற்போது ஐரோப்பா டி20 லீக் தொடரிலும் அஸ்வின் விளையாட ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

ஐரோப்பா டி20 லீக் தொடரின் டப்ளின் கார்டியன்ஸ் அணியில் இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் ராகுல் டிராவிட் முதலீடு செய்திருக்கிறார். இதனால் இந்திய ஜாம்பவான் அஸ்வினை கேப்டன் மற்றும் பயிற்சியாளராக ஒப்பந்தம் செய்துள்ளார். ஏற்கனவே டிஎன்பிஎல் தொடரில் திண்டுக்கல் டிராகன்ஸ் அணியின் கேப்டன் மற்றும் பயிற்சியாளராக அஸ்வின் விளையாடி கோப்பையை வென்றுள்ளார்.
இதன் மூலமாக அஸ்வின் தனது அடுத்தக் கட்ட கிரிக்கெட் பயணத்தை தொடங்கியுள்ளதாக தெரிகிறது. இதுகுறித்து அஸ்வின் பேசுகையில், எனக்கு 39 வயதாகிவிட்டது. இப்படியான கட்டத்தில் ஒரு வீரராக மட்டுமல்லாமல் கூடுதலான பங்களிப்பை வழங்க வேண்டும் என்று கருதுகிறேன். 2 ஆண்டுகளாக உள்ளூர் கிரிக்கெட்டில் பயிற்சியாளர் மற்றும் கேப்டனாக ஆடி இருக்கிறேன்.
அதனை ராகுல் டிராவிட் பார்த்திருக்கலாம். என் மீது நம்பிக்கை வைத்து பொறுப்பை கொடுத்துள்ளார். என்னுடைய அடுத்தக் கட்ட பயணத்திற்கான ஆரம்ப புள்ளியாகவும் அமைந்துள்ளது. இதனை கடந்த 4, 5 ஆண்டுகளாகவே செய்து வருகிறேன். எந்த அணிக்கு ஆடினாலும், அந்த அணியின் ஒரு முக்கிய அங்கமாக இருந்துள்ளேன். வீரராக, கேப்டனாக, ஆலோசகராக சரியான முடிவுகளை அணிக்காக எடுக்கிறேன்.
ஒரு கிரிக்கெட் அணியை வழிநடத்த சுதந்திரம் மிகவும் அவசியம். ராகுல் டிராவிட்டும் கிரிக்கெட் குறித்த முடிவுகளை எடுக்க மாட்டேன் என்பதில் உறுதியாக இருக்கிறார். களத்தில் என்னுடைய கட்டுப்பாட்டில் தான் அணி இருக்கும் என்று கருதுகிறேன். இந்த அணியை கட்டமைப்பதற்கும், பயணிப்பதற்குமான பொறுப்பை எடுத்து கொண்டுள்ளேன் என்று தெரிவித்துள்ளார்.