பழங்குடியின மக்களிடம் பாட்டுப்பாடி, நடனமாடி கல்விக்கான விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார் நிர்மலா.
நீலகிரி மலையில் உள்ள கோத்தகிரியின் குளிர்ந்த மலைமூட்டங்களுக்கிடையிலும், சருகுகள் அடர்ந்த வானுயர்ந்த மரங்களுக்கு இடையிலும் இடையறாது சோர்வில்லாமல் பயணிக்கின்றன நிர்மலாவின் கால்கள்.
இவர் தொலைதூர பழங்குடியினக் கிராமங்களுக்குச் சென்று பாட்டுப்பாடி, பொம்மலாட்டம் கதைச்சொல்லி அம்மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார். நிர்மலா கடந்த பத்து ஆண்டுகளாக, தன் சொந்த முயற்சியால் மலைகளின் நடுவே வாழும் தோடர்கள், பணியர்கள், காட்டு நாயக்கர்கள், குரும்பர், இருளர், கோத்தர்கள் போன்ற பழங்குடியின மக்கள் அடிப்படையில் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்களைக் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார்.
இவரின் இந்தச் செயல் குறித்து அறிந்த நாம், இரண்டு நாள்கள் நிர்மலாவுடன் பயணத்தை மேற்கொண்டோம்.
முதலில் ஜக்கநாரை கிராமத்திற்குச் செல்லும்போது பேசிய நிர்மலா ,
“இங்கு இருக்கும் கிராம மக்கள் எங்கள ஏற்றுக்கொள்ளவே இல்லை. எங்கள பார்த்தாலே அவங்களுக்குப் பயமும், தயக்கமும் இருந்துச்சு. காரணம் நாங்க அவங்கள புடிச்சிட்டு போயிருவோம்னு. இந்த மக்கள் ஸ்கூல் போவதற்கு விரும்பல. நாலா-னு பழங்குடியின மக்களுக்காகவே அசோசியேஷன் இருக்கு. அது மூலமாக வந்து குழந்தைகளுக்கு ஸ்கூல் பத்தி நாங்க விழிப்புணர்வு கொடுத்தோம்.
நாங்க எவ்வளவு சொல்லியும் குழந்தைகள் பள்ளிக்கு வர மறுத்தார்கள். ஏன்னா கல்விங்கிறது அவங்க வாழ்க்கையில தேவையற்ற ஒன்றாக நினைச்சாங்க. நாலா மூலமா ஜீப் அனுப்பி நாங்க இந்தக் குழந்தைகளை ஸ்கூலுக்குக் கூட்டிட்டு போனோம். போக போக அவங்களுக்கு கல்வியோட முக்கியத்துவம் புரிஞ்சுது.
ஆனா, இது எதுவுமே எங்களால ஈசியா பண்ண முடியல. முதல்ல அவங்களோட நம்பிக்கையைப் பெறுவதுதான் சரியா இருக்கும்ன்னு அவங்களோடு வாழ்ந்து, அவங்களோடு சிரித்து, அவங்க மொழியையே கத்துக்கிட்டு அவங்கள்ல ஒருவர மாறினேன்.