
நேற்று முல்லன்பூர் மைதானத்தில் நடைபெற்ற பஞ்சாப் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டியின் போது இந்தச் சம்பவம் நிகழ்ந்துள்ளது. ராஜஸ்தான் அணி பேட்டிங் செய்து கொண்டிருந்தபோது, கேமராக்கள் வீரர்களின் ஓய்வறை (Dressing Room) பக்கம் திரும்பின. அப்போது கேப்டன் ரியான் பராக், ‘வேப்பிங்’ (Vaping) எனப்படும் இ-சிகரெட்டைப் பயன்படுத்திய காட்சிகள் நேரடி ஒளிபரப்பில் பதிவாகின. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் நிலையில், ஒரு பொறுப்பான பதவியில் இருக்கும் வீரர் இத்தகைய செயலில் ஈடுபட்டது கடும் விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது.
இந்தியாவில் 2019-ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்ட சட்டத்தின்படி, மின்னணு சிகரெட்டுகளின் பயன்பாடு மற்றும் விற்பனைக்கு முழுமையான தடை விதிக்கப்பட்டுள்ளது. இது தவிர, ஐபிஎல் ஒழுங்குமுறை விதிகளின்படி மைதான வளாகத்திலோ அல்லது வீரர்கள் தங்கும் அறையிலோ புகைபிடிக்க அனுமதி இல்லை. ஏற்கனவே ராஜஸ்தான் அணியின் மேலாளர் செல்போன் பயன்படுத்தியதற்காக அபராதத்திற்கு உள்ளான நிலையில், தற்போது கேப்டனே சட்டத்திற்குப் புறம்பான செயலில் ஈடுபட்டிருப்பது அந்த அணிக்கு மேலும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.
இந்தச் சீசனில் பேட்டிங்கில் பெரும் தடுமாற்றத்தைச் சந்தித்து வரும் ரியான் பராக், இதுவரை 9 போட்டிகளில் வெறும் 117 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார். பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் ராஜஸ்தான் அணி வெற்றி பெற்று பஞ்சாப்பின் வெற்றிப் பயணத்தைத் தடுத்தாலும், கேப்டனின் இந்தச் செயல் அந்த வெற்றியின் மகிழ்ச்சியை மங்கச் செய்துள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக ஐபிஎல் நிர்வாகம் விரைவில் விசாரணை நடத்தி, அவருக்குப் போட்டி ஊதியத்தில் அபராதம் அல்லது சில போட்டிகளில் விளையாடத் தடை விதிக்க வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது*