நாட்டின் பிற பகுதிகளில், கோவிலில் அசைவ உணவு உண்பது அனுமதிக்கப்படாத ஒன்றாக இருக்கிறது. ஆனால் தமிழகத்தில் சில கோயில்களில் அசைவ உணவு போடப்படுகிறது.
கோயில்களில் அசைவ உணவுக்கு இருக்கும் நடைமுறையை மாற்றும் முயற்சியில் மேற்கு வங்க முதல்வர் ஈடுபட்டுள்ளார். மேற்கு வங்க மக்களின் பிரதான உணவாக மீன் இருக்கிறது. பா.ஜ.க ஆட்சிக்கு வந்தால் மீன் சாப்பிடக்கூட தடை விதிப்பார்கள் என்று கடந்த சட்டமன்றத் தேர்தலின் போது முன்னாள் முதல்வர் மம்தா பானர்ஜி பிரசாரம் செய்தார்.
இதையடுத்து நாங்கள் மீனுக்கு எதிரானவர்கள் இல்லை என்று கூறி தேர்தல் பிரசாரத்தின் போது பா.ஜ.க தலைவர்கள் மீன் சாப்பாட்டைச் சாப்பிட்டனர்.
தற்போது மீண்டும் மீன் சாப்பாட்டை ஊக்கப்படுத்தும் முயற்சியில் பா.ஜ.க ஈடுபட்டுள்ளது. கௌசிகி அமாவாசையை முன்னிட்டு நேற்று மாலை முதல்வர் சுவந்து அதிகாரி காளிகாட் சென்றார்.
அவர் அங்கு தரையில் அமர்ந்து, ஒரு பெரிய மீன் தலையை உள்ளடக்கிய சாப்பாட்டை சாப்பிட்டார். இது தவிர, வறுத்த மீன் மற்றும் பாசந்தி புலாவும் அவர் தட்டில் (மஞ்சள் அரிசி) இருந்தது. காளிகாட்டில் உள்ள முதன்மை தெய்வமான காளிக்கு மீன் மற்றும் ஆட்டு இறைச்சியை வழங்குவது ஒரு பாரம்பரியம்.
சாமிக்குப் படைக்கப்படும் பிரசாதம் பின்னர் பக்தர்களால் உட்கொள்ளப்படுகிறது. இறைச்சி உண்ணும் வங்காளத்திற்கு வடமாநிலங்களில் இருந்து சைவ உணவுப் பழக்கத்தை பா.ஜ.க இறக்குமதி செய்வதாக அடிக்கடி விமர்சிக்கப்படும் நிலையில் சுவந்து அதிகாரி அதனை நிராகரிக்கும் வகையில் கோயிலில் அமர்ந்து அசைவம் சாப்பிட்டுள்ளார்.
மேலும் சுவந்து அதிகாரி கோயிலில் அசைவம் சாப்பிட்டதன் மூலம் அசைவம், சைவம் உணவு சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டு இருப்பதாக பா.ஜ.க தெரிவித்துள்ளது.
இது குறித்து அக்கட்சியின் செய்தித்தொடர்பாளர் பிரதீப் பண்டாரி அளித்த பேட்டியில், “சர்ச்சை இங்கு முடிய வேண்டும். காளிகாட்டில், முதல்வர் சுவந்து அதிகாரி மா காளியின் பாரம்பரிய மீன் விருந்தில் பங்கேற்கிறார். வங்காளத்தின் நம்பிக்கை, மரபுகள் மற்றும் வாழ்க்கை முறையை மதிக்கிறார். அவரது தலைமையில், வங்காளத்தின் நலன்கள், வங்காளத்தின் பாரம்பரியங்கள் மற்றும் வங்காளத்திற்கு எது சரியானது என்பதில் பாஜக எப்போதும் உறுதியாக நிற்கும்” என்று கூறினார்.
துர்கா பூஜையின் போது அசைவ உணவைத் தவிர்க்குமாறு வங்காள இந்துக்களிடம் பாகேஷ்வர் பாபா என்று அழைக்கப்படும் பாகேஷ்வர் தாம் தலைமை பூசாரி திரேந்திர சாஸ்திரி வேண்டுகோள் விடுத்ததில் இருந்து சைவ உணவு சர்ச்சை எழுந்தது.
துர்கா பூஜையின்போது அசைவம் சாப்பிடும் பெங்காலி இந்துக்களை “பகண்டி” (நயவஞ்சகர்) என்றும் அவர் அழைத்தார். “‘துர்கா பூஜையின் போது மேற்கு வங்கத்தில் இறைச்சி மற்றும் மதுபானக் கடைகள் மூடப்பட வேண்டும்,” என்று சாஸ்திரி கூறினார்.