`கோவைக்கு மெட்ரோ, எங்கள் தேர்தல் அறிக்கையிலேயே இருக்கிறது; அதற்கான நடவடிக்கைகள்…’- அமைச்சர் சம்பத்

Spread the love

தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத் குமார், கோவை அரசு மருத்துவமனையில் ஆய்வு மேற்கொண்டார். மருத்துவ கட்டமைப்புகள், மருந்து கையிருப்பு, மருத்துவர்கள் மற்றும் ஊழியர்கள் நிலை, நோயாளிகளுக்கான அடிப்படை வசதிகள் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் ஆய்வு செய்யப்பட்டன.

ஆய்வுக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் சம்பத் குமார், “மக்களின் சுகாதாரத்திற்கு முதலமைச்சர் மிகுந்த முக்கியத்துவம் அளித்து வருகிறார். அதன்படி அரசு மருத்துவமனைகளில் தேவையான அனைத்து வசதிகளும் சரியாக உள்ளதா என்பதை ஆய்வு செய்து வருகிறோம். சில இடங்களில் கட்டமைப்புகளை மேம்படுத்த வேண்டிய அவசியம் உள்ளது. அதற்கான நடவடிக்கைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்படும்” என்றார்.

மருத்துவர் பற்றாக்குறை குறித்து கேட்டபோது, “அனைத்து துறைகளிலும் இல்லாமல் சில துறைகளில் மட்டும் பற்றாக்குறை உள்ளது. அதற்கான முன்மொழிவுகள் அனுப்பப்பட்டுள்ளன” என்று தெரிவித்தார்.

மருத்துவமனையில் பராமரிப்பு குறைபாடுகள் இருப்பதாக நோயாளிகள் மற்றும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளதாக கூறிய அமைச்சர், பழைய கட்டடங்களை இடித்து புதிய கட்டடங்கள் அமைப்பதற்கான திட்டங்கள் தயாராக உள்ளதாகவும் தெரிவித்தார்.

தனியார் ஒப்பந்த ஊழியர்கள் தொடர்பான குற்றச்சாட்டுகள் குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், “அது குறித்து தகவல்கள் வந்துள்ளன. முழுமையான ஆய்வுக்குப் பிறகே உண்மை நிலை தெரியவரும்” என்றார்.

குடிநீர், சுடுநீர், நோயாளிகளை அழைத்துச் செல்லும் சாலைகள், பாதுகாப்பு வசதிகள், உறவினர்கள் தங்கும் இடங்கள் உள்ளிட்ட அடிப்படை வசதிகளில் குறைபாடுகள் இருப்பதாகவும், அவற்றை சரிசெய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறினார்.

கைதிகள் தங்கும் அறைகள் மற்றும் காவலர்கள் அறைகள் மோசமான நிலையில் இருப்பதாக கண்டறியப்பட்டதாகவும், “15 முதல் 20 நாள்களுக்குள் சீரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்படும்” என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

இதய நோயாளிகள் அதிக அளவில் சிகிச்சைக்காக வருவதால் காத்திருப்பு பட்டியல் அதிகரித்துள்ளதாகவும், இருப்பினும் தேவையான படுக்கைகள், உபகரணங்கள் மற்றும் மருத்துவ நிபுணர்கள் உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளதாகவும் அவர் கூறினார்.

ஆய்வின் போது ஸ்கேன் மையம், எக்கோ பிரிவு, வெளிநோயாளிகள் பிரிவு, கேன்டீன், கைதிகள் சிகிச்சைப் பிரிவு, காவலர் தங்கும் அறைகள் மற்றும் கழிப்பறைகள் உள்ளிட்ட பகுதிகள் பார்வையிடப்பட்டன.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *