விழுப்புரம் மாவட்டம், சிறுவாடி பகுதியைச் சேர்ந்தவர் கார்த்திக் (29). இவர் கோவை வெள்ளியங்கிரி மலையடிவாரத்தில் உள்ள ஈஷா யோக மையத்தில், நேற்றிரவு கார்த்திக் தலையில் பலத்த காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் மர்மமான முறையில் இறந்து கிடந்துள்ளார்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த ஆலாந்துறை காவல் துறையினர், அவரது உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த மர்ம மரணம் குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதனிடையே கார்த்திக் தற்கொலை செய்து கொண்டாரா அல்லது விபத்தில் உயிரிழந்தாரா என்பது குறித்து, அந்த மையத்தில் பணியாற்றுபவர்களிடம் காவல் துறையினர் விசாரணை நடத்தினர்.
மேலும் அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகளையும் ஆய்வு செய்தனர். இதனைத்தொடர்ந்து காவல் துறையினர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஈஷா யோகா மையத்தில் கார்த்திக் என்ற சுற்றுலாப் பயணி உயரமான இடத்திலிருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டது விசாரணையில் தெரியவந்துள்ளது.
பிரேதப் பரிசோதனை முடிவுகள் மற்றும் சிசிடிவி ஆதாரங்கள் ஆகியவற்றை வைத்துப் பார்க்கையில், உயரத்தில் இருந்து குதித்ததால் அவர் உயிரிழந்தார் என்பது தெரியவருகிறது.

விசாரணையில் எந்தவிதமான குற்றச் செயலோ அல்லது சந்தேகத்திற்கிடமான சூழலோ கண்டறியப்படவில்லை. கோவையில் ஹிட்டாச்சி இயந்திர ஓடுநராகப் பணியாற்றி வந்த கார்த்திக், சுற்றுலாப் பயணியாக ஈஷா யோகா மையத்திற்கு வந்தபோது தற்கொலை செய்து இருப்பது தெரியவந்துள்ளது.
பிரேதப் பரிசோதனை நிறைவில் உயிரிழந்தவருக்கு ஏற்பட்ட காயங்கள் உயரத்திலிருந்து கீழே விழுந்ததால் ஏற்பட்ட காயங்களுடன் ஒத்துப்போவதாக மருத்துவர்களின் முதல் கட்ட ஆய்வுகள் தெரிவித்துள்ளனர்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.