வாசுகி பாம்பை, தன் வயிற்றில் கட்டிக் கொண்டிருப்பதால், நாக தோஷத்தை நீக்கி அருள்கிறார் ஸ்ரீகணபதி பெருமான். நாக தோஷம் உள்ளவர்கள், இங்கு வந்து ஸ்ரீவிநாயகரை வணங்கினால், தோஷம் நீங்கி, வளமுடன் வாழ்வார்கள் என்பது நம்பிக்கை என்கிறார்கள் இங்கு வந்து வழிபடும் பக்தர்கள்.
இந்த ஆலயம், அந்தப் பகுதி மக்களால், கடந்த 98-ம் வருடம், ஜகத்குரு ஸ்ரீஜயேந்திர சரஸ்வதி சங்கராச்சார்ய ஸ்வாமிகளின் தலைமையில் பிரதிஷ்டை செய்யப்பட்டு, கும்பாபிஷேகம் செய்யப்பட்டது.

எத்தகைய சிக்கலாக இருந்தாலும் என்ன இன்னல் வந்திடினும் முன்னின்று வந்து அனுக்கிரகம் செய்து அதைத் தீர்த்துவைப்பாரம் இந்த விநாயகர். இப்படி முந்திவந்து காப்பவர் என்பதால்தான் இவருக்கு “ஸ்ரீமுந்தி விநாயகர்’ எனும் திருநாமம் அமைந்ததாகச் சொல்வர். அனைத்துக் கடவுளருக்கும் முதன்மையானவர் என்பதாலும் இந்தத் திருநாமம் இவருக்கு.
‘பிடியதன் உருவுமை கொளமிகு கரியது’ என்ற வாக்குக்கு இணங்க, அம்பாள் பார்வதியும் பரமேஸ்வரனும் யானை உருக்கொண்டு ஸ்ரீவிநாயகப் பெருமானாகத் தோன்றியது போல் காட்சி அளிக்கிறார் கணபதி. அதாவது, அவரின் வலது பகுதி, ஆண்களைப் போலவும் இடது பக்கம் பெண்களின் வடிவிலும் அமைந்து உள்ளது.