தனுஷ்கோடி மீனவர் வலையில் “அந்த” பொருள்.. சீன பாக்கெட் பின்னணி? ஒரே நாளில் ராமநாதபுரத்தில் 2 மர்மம் | Dhanushkodi Fisherman Finds Strange Object in Net.. Chinese Water Packet Raises Mystery, 2 Shocks in Ramanathapuram

Spread the love

Tamilnadu

oi-Hema Vandhana

ராமேஸ்வரம்: ராமநாதபுரம் மாவட்டம் தனுஷ்கோடி கடற்கரையில் 2 சம்பவங்கள் ஒரே நாளில் நேற்று நடந்துள்ளன.. சீன எழுத்துகளுடன் கூடிய குடிநீர் பாக்கெட்டுகள் நூற்றுக்கணக்கில் கரை ஒதுங்கியுள்ள நிலையில், அதே பகுதியில் விஷத்தன்மை கொண்ட பட்டன் ஜெல்லி மீன்களும் குவியல் குவியலாக கரை ஒதுங்கி வருகின்றன. இதனால் கடல்வாழ் உயிரினங்களுக்கும், கடலில் குளிக்க வரும் சுற்றுலாப் பயணிகளுக்கும் ஆபத்து ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது.

ராமேஸ்வரம் தனுஷ்கோடி தென்கடல் பகுதியில் கடந்த சில நாட்களாகவே, மர்மமான பொருட்கள் கடலில் மிதந்து கரை ஒதுங்குவதை அந்த பகுதி மீனவர்கள் கவனித்து வந்துள்ளனர்.

Dhanushkodi Fisherman Chinese Water Packet Ramanathapuram News

ராமேஸ்வரம் கடல்

இந்நிலையில், நேற்று அதிகாலையில் வழக்கம்போல கடலோரத்தில் மீன்பிடிக்க சென்ற பாரம்பரிய மீனவர் ஒருவரின் வலையில், சில பாக்கெட்டுகள் சிக்கின. கரைக்கு வந்த பிறகு வலையில் இருந்து அவற்றை பிரித்து பார்த்தபோது, பாக்கெட்டுகளில் சீன எழுத்துகள் அச்சிடப்பட்டிருந்ததுடன், உள்ளே தண்ணீர் அடைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.

இதுகுறித்து மீனவர்கள் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து கடற்கரையோரம் ஆங்காங்கே கிடந்த நூற்றுக்கணக்கான பிளாஸ்டிக் பாக்கெட்டுகளை அதிகாரிகள் கைப்பற்றி ஆய்வு செய்தனர். அதில் சீன நாட்டின் குடிநீர் தரக்குறியீடுகள் அச்சிடப்பட்டிருந்தன. இவை சீனாவில் தயாரிக்கப்பட்ட அவசர கால குடிநீர் பாக்கெட்டுகள் என்றும், கடல்சார் பாதுகாப்பு மற்றும் அவசர காலங்களில் உயிரைக் காப்பாற்ற பயன்படுத்தப்படும் பொருட்கள் என்றும் தெரியவந்துள்ளது.

தனுஷ்கோடி சீன பாக்கெட்

இந்த பாக்கெட்டுகள் காலாவதியான பிறகு இலங்கை கடற்படை படகுகள் அல்லது சர்வதேச வணிகக் கப்பல்களில் இருந்து கடலில் வீசப்பட்டிருக்கலாம் என்றும், கடல் நீரோட்டம் மற்றும் அலைகள் காரணமாக தனுஷ்கோடி கடற்கரைக்கு வந்து சேர்ந்திருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. எனினும் இதுகுறித்து புலனாய்வு பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கடலில் மிதக்கும் பிளாஸ்டிக் பாக்கெட்டுகள் கடல்வாழ் உயிரினங்கள் விழுங்குவதற்கும், அவற்றில் சிக்கி பாதிக்கப்படுவதற்கும் வாய்ப்புள்ளதால், அவற்றை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பட்டன் ஜெல்லி மீன்கள்

அதேபோல, தனுஷ்கோடி பகுதியில் தென்மேற்கு பருவக்காற்று வீசினாலும் வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளது. இதனால் மன்னார் வளைகுடா கடலில் தட்பவெப்பநிலையில் மாற்றம் ஏற்பட்டு, ராட்சத அலைகளும் எழுகின்றன. இந்த மாற்றம் காரணமாக உணவு தேடி வரும் ஏராளமான பட்டன் ஜெல்லி மீன்கள் தனுஷ்கோடி கடற்கரையில் பல இடங்களில் குவியல் குவியலாக ஒதுங்கியுள்ளன.

பட்டன் ஜெல்லி மீன்கள் என்றாலே சிறியதாகவும் வட்ட வடிவத்திலும், ஊதா அல்லது நீல நிறத்திலும் காணப்படும் கடல்வாழ் உயிரினங்களாகும்… பார்ப்பதற்கு அழகாக இருந்தாலும், சில வகைகளுக்கு நச்சுத்தன்மை இருப்பதால் அவற்றை கைகளால் தொடுவது ஆபத்தை ஏற்படுத்தலாம். இவற்றின் உடலில் உள்ள நச்சு செல்கள் மனிதர்களின் தோலில் பட்டால் அரிப்பு, எரிச்சல், சிவத்தல், வலி மற்றும் வீக்கம் போன்ற அறிகுறிகள் ஏற்படலாம். அதிகமாக தொடர்பு ஏற்பட்டால் தோலில் தடிப்புகள் உள்ளிட்ட பாதிப்புகளும் ஏற்பட வாய்ப்புள்ளது.

கடல் நீரின் வெப்பநிலை, நீரோட்டம் மற்றும் உணவு கிடைக்கும் பகுதிகளில் ஏற்படும் மாற்றங்களால் பட்டன் ஜெல்லி மீன்கள் கூட்டமாக இடம்பெயர்ந்து கரைப்பகுதிக்கு வரக்கூடும். எனவே, கடற்கரையில் இவை குவிந்து கிடந்தால் சுற்றுலாப் பயணிகள் அவற்றை தொடாமல் விலகி இருக்க வேண்டும் என மீனவர்கள் எச்சரித்துள்ளனர்…!!!

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *