கள்ளக்குறிச்சியைச் சேர்ந்த அமுதன் (19) என்பவர், கோவை ஒத்தக்கால் மண்டபம் பகுதியில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு பயின்று வந்தார்.
கல்லூரி விடுதியில் தங்கியிருந்து அமுதன் படித்து வந்த நிலையில், அங்கு பணிபுரியும் சமையலர் ஒருவரைத் தாக்கியதாகக் கூறப்படுகிறது. இதனால் கல்லூரி விடுதியிலிருந்து அவர் இடைநீக்கம் செய்யப்பட்டார். பின்னர் தனது நண்பர்கள் அறையில் தங்கி இருந்தார்.
இதனிடையே தனது நண்பர்களுடன் சேர்ந்து பூங்கா நகர் பகுதியில் இரண்டாம் ஆண்டு படிக்கும் மாணவர்கள் தங்கியிருந்த வாடகை வீட்டிற்கு முகமூடி அணிந்தபடி சென்று, கத்தியைக் காட்டி மிரட்டி செல்போன்களைப் பறித்ததாகக் கூறப்படுகிறது.
இதில் ஈடுபட்டவர்களில் அமுதனும் ஒருவர் என்பது இரண்டாம் ஆண்டு மாணவர்களுக்குத் தெரியவந்துளது. இதையடுத்து நேற்று முன்தினம் காலை அமுதன் மற்றும் அவரது நண்பர் ஸ்ரீமன் (19) ஆகியோர் கல்லூரிக்குச் சென்றபோது, அமுதனை அடையாளம் கண்டுள்ளனர். பின்னர் இருவரையும் அக்கல்லூரிக்குப் பின்புறம் உள்ள மைதானத்திற்கு அழைத்துச் சென்று கடுமையாகத் தாக்கியதாகக் கூறப்படுகிறது.
இதையடுத்து அறைக்குத் திரும்பிய அமுதனுக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்ட நிலையில், சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி அமுதன் உயிரிழந்தார்.
இது குறித்து ஸ்ரீமன் அளித்த புகாரின் பேரில் செட்டிபாளையம் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். காவல் துறையினர் விசாரணையில் தாக்குதல் நடத்தி செல்போன்களைப் பறித்ததற்குப் பதிலடியாக நடத்தப்பட்ட தாக்குதலில் அமுதன் உயிரிழந்து இருப்பது தெரியவந்தது.
இதையடுத்து இச்சம்பவத்தில் ஈடுபட்ட திருவள்ளூரைச் சேர்ந்த 17 வயது சிறுவன், கடலூரைச் சேர்ந்த ஆராஅமுதன் (20), சிவகங்கையைச் சேர்ந்த அரவிந்த் (21), திருவாரூரைச் சேர்ந்த சிவ ரோஹித் (20), பெரம்பலூரைச் சேர்ந்த மணி பாலு (20) ஆகிய 5 மாணவர்களை காவல் துறையினர் கைது செய்தனர். மேலும் இச்சம்பவத்தில் தொடர்புடைய மற்ற நபர்களையும் அடையாளம் கண்டுபிடிக்க தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.