திருப்பூர் மாவட்டம் அவிநாசி மற்றும் பெருமாநல்லூர் ஆகிய பகுதிகளில் தேர்தல் பரப்புரை மேற்கொள்வதற்காக, த.வெ.க. தலைவர் விஜய் தனி விமானம் மூலம் கோவைக்கு வருகை தந்தார். கோவை விமான நிலையத்தில் இருந்து அவிநாசி நோக்கிச் சென்ற அவருக்கு, ஆங்காங்கே திரண்டிருந்த தொண்டர்கள் மற்றும் ரசிகர்கள் வரவேற்பளித்தனர். அப்போது வாகனத்தின் மேல் ஏறி விஜய் கை அசைத்தபடி ரோடு ஷோ சென்றார்.
இதனிடையே கணியூர் சுங்கச்சாவடி பகுதியில் சூலூர் தொகுதி த.வெ.க. வேட்பாளர் சுகுமார் தனது ஆதரவாளர்களுடன், விஜய்க்கு வரவேற்பு அளிக்கக் காத்திருந்தார். சுமார் ஒன்றரை மணி நேரத்திற்கும் மேலாக சுட்டெரிக்கும் வெயிலில் நின்றிருந்த சுகுமார், விஜய் வந்தபோது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி திடீரென மயங்கி விழுந்தார். இதையடுத்து அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு சாலையோரம் அமர வைத்து முகத்தில் தண்ணீர் தெளித்து முதலுதவி அளித்தனர். சிறிது நேரத்திற்குப் பிறகு சுகுமார் மயக்கம் தெளிந்து இயல்பு நிலைக்குத் திரும்பினார். இந்தக் கூட்ட நெரிசல் காரணமாக விஜய் சென்ற பிறகு அப்பகுதி முழுக்க செருப்புகள் சிதறிக் கிடந்தன.