தமிழ்நாட்டு அமைச்சரவையில் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சராகவும், அறந்தாங்கி தொகுதி சட்டமன்ற உறுப்பினராகவும் இருந்து வருபவர் ஜெ.முகமது பர்வேஸ்.
இவர், கடந்த சில நாட்களாக தமிழக சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில் செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்ப வசதியுடன் கூடிய கேமரா பொருத்தப்பட்ட கருப்பு நிறக் கண்ணாடியை அணிந்து பங்கேற்றதாகத் தகவல்கள் வெளியாகின.
பேரவை நிகழ்வுகளை இந்தச் சிறிய வடிவிலான கேமரா மூலம் அமைச்சர் பதிவு செய்வதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.
இந்நிலையில், அமைச்சர் ஜெ.முகமது பர்வேஸ், இந்தச் சர்ச்சை குறித்து புதுக்கோட்டையில் நேற்று செய்தியாளர்களிடம் அதிரடியாக விளக்கம் அளித்தார்.

15 புதிய அறிவிப்புகள்
செய்தியாளர்களிடம் அமைச்சர் பர்வேஸ் கூறியதாவது:-
“தமிழக சட்டப்பேரவையில் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை சார்பில் 15 புதிய அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன. வருங்காலங்களில் இத்துறை மூலம் மக்களின் தேவைகளை அறிந்து புதிய திட்டங்கள் தொடர்ந்து செயல்படுத்தப்படும்.
முந்தைய ஆட்சிக் காலத்தில் சட்டப்பேரவை நடவடிக்கைகளை அங்கிருந்தவர்களிடம் மட்டுமே கேட்டுத் தெரிந்துகொள்ள முடிந்தது. ஆனால், தற்போது அனைத்து நிகழ்வுகளும் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்பட்டு வருகின்றன. எதிர்க்கட்சியினர் மட்டுமே நேரலையில் காட்டப்படுவதாகவும், ஆளுங்கட்சியினரின் நடவடிக்கைகள் அவ்வளவாகக் காட்டப்படுவதில்லை என்றும் கூறுவது முற்றிலும் தவறானது.
ஏ.ஐ. கேமரா வதந்திக்கு விளக்கம்
எனக்கு சின்ன வயதிலிருந்தே கண்பார்வையில் ‘பவர்’ பிரச்சனை இருக்கிறது. அண்மையில் தலைவலி காரணமாக பிரபல கண் மருத்துவமனைக்குச் சென்று பரிசோதனை செய்தேன். அப்போது மருத்துவர் பரிந்துரை செய்து கொடுத்த சாதாரணக் கண்ணாடியைத்தான் நான் அணிந்துள்ளேன்.
ஆனால், சிலர் வேண்டுமென்றே இதில் ‘ஏ.ஐ. கிராபிக்ஸ்’ செய்து, நான் சட்டமன்றத்தில் ஏ.ஐ. கேமரா பொருந்திய கண்ணாடியைப் போட்டுச் சென்றது போல பொய்யான தகவல்களைப் பரப்பி வருகிறார்கள். சட்டமன்ற நிகழ்ச்சிகள் அனைத்தும் நேரலையில் ஓடிக்கொண்டிருக்கும்போது, நான் ஏன் தனியாக கேமரா வைத்துப் பதிவு செய்யப் போகிறேன்?

மக்கள் நம்புவார்கள்
என்னை ஏதேனும் ஒரு வகையில் விமர்சிக்க வேண்டும் என்பதற்காகவே சிலர் திட்டமிட்டு இதுபோன்ற அவதூறுகளைப் பரப்புகின்றனர். நான் அணிந்திருக்கும் கண்ணாடியை நல்லா ‘ஜூம்’ செய்து பார்த்தாலே உண்மை தெரியும்.
எதிர்க்கட்சியினர் கிளப்பிவிட்ட இந்த வதந்தியைத் தூண்டிவிட்டவர்கள் நம்பாவிட்டாலும், பொதுமக்கள் என்னுடைய விளக்கத்தை நிச்சயம் நம்புவார்கள்.”
இவ்வாறு அமைச்சர் ஜெ.முகமது பர்வேஸ் கூறினார்.