Tamilnadu
oi-Yogeshwaran Moorthi
புதுக்கோட்டை: புதுக்கோட்டையில் நடைபெற்ற திமுக செயற்குழு கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் ரகுபதி மற்றும் முன்னாள் எம்எல்ஏ உதயம் சண்முகம் இடையில் நடந்த கடுமையான வாக்குவாதத்தால் ஏற்பட்டு கூச்சல் குழப்பம் நிலவியது. அறங்தாங்கி தொகுதியில் தவெக வென்றதற்கு உதயம் சண்முகம் மகன் தான் காரணம் என்று ரகுல்பதி பேசியதால், மேடையில் கூச்சல் ஏற்பட்டது.
திமுகவில் மறுசீரமைப்பு நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதனையொட்டி மாவட்ட வாரியாக செயற்குழு கூட்டம் நடத்தப்பட்டு கருத்துக்கள் கேட்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் புதுக்கோட்டை மாவட்டத்தில் மறுசீரமைப்பு தொடர்பான ஆலோசனை கூட்டம் முன்னாள் எம்பி ஏகேஎஸ் விஜயன் தலைமையில் நடைபெற்றது. இதில் முன்னாள் அமைச்சர் ரகுபதி, மெய்யநாதன் பங்கேற்றனர்.

அதேபோல் எம்எம் அப்துல்லா, எம்எல்ஏ முத்துராஜா உள்ளிட்டோரும் பங்கேற்றனர். இந்த கூட்டத்தில் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள தொகுதியில் திமுக தோல்வி அடைந்ததற்கான காரணங்கள் குறித்தும் பேசப்பட்டதால், வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது நிர்வாகிகள் கிடையே ரகுபதி மற்றும் ஏகேஎஸ் விஜயன் ஆகியோர் சமரசம் மேற்கொண்டு வந்தனர்.
ஒரு கட்டத்தில் முன்னாள் எம்எல்ஏ உதயம் சண்முகம் ஆவேசமாக மேடையில் ஏறி மைக்கை பிடுங்கி, திமுக வெல்ல வேண்டிய அறந்தாங்கி தொகுதியை காங்கிரஸ் கட்சிக்கு விட்டுக் கொடுத்தௌ ஏன் என்று கேள்வி எழுப்பினார். இதனால் அங்கு கூடுதல் பரபரப்பு ஏற்பட்டது. இதற்கு ரகுபதி, அறந்தாங்கி தொகுதியில் தவெகவை வெல்ல வைத்தது உன் மகன் தான்.
பர்வேஸ் உடன் தெருத் தெருவாக ஓட்டு கேட்டது உங்கள் மகன் தான்.. உங்களால் தான் அறந்தாங்கி தொகுதியில் தவெக வென்றது என்று பதிலடி கொடுத்தார். இதனால் அடுத்த 15 நிமிடங்கள் வாக்குவாதம் முற்றியது. திமுக மறுசீரமைப்பு நடவடிக்கைகளால் கட்டாயம் ஒவ்வொரு மாவட்டத்திலும் பஞ்சாயத்து வெடிக்கும் என்றே திமுக தலைமை கணக்கு போட்டிருந்தது.
அதற்கேற்ப முதல் வாரத்திலேயே புதுக்கோட்டையில் மோதல் வெடித்துள்ளது. அதேபோல் முன்னாள் அமைச்சர் ரகுபதிக்கு 70 வயதை கடந்துவிட்டதால், அவர் மாவட்டச் செயலாளர் பதவியை இழக்கிறார். அவரின் இடத்திற்கு எந்த நிர்வாகி கொண்டு வரப்படுவார் என்ற கேள்வி புதுக்கோட்டை திமுகவினர் மத்தியில் எழுந்துள்ளது.