சட்டமன்றக் கச்சேரி… பாடல் பாடி அசத்தும் எம்.எல்.ஏ.க்கள்! – Kumudam

Spread the love

தமிழ்நாடு சட்டமன்றக் கூட்டத்தொடர் தமிழக வெற்றி கழகம் ஆட்சி அமைந்து அதன் முதல் கூட்டத்தொடர் என்பதால் அனைவரும் மத்தியிலும் எதிர்ப்பார்ப்பு கிளம்பிய நிலையில் தற்போது இந்த கூட்டத்தொடர் ஆகஸ்ட் 5 ஆம் தொடங்கி செப்டம்பர் 8 ஆம் தேதி வரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில் ஆகஸ்ட் 5 ஆம் தேதி நிதிநிலை அறிக்கையும்,ஆகஸ்ட் 6 ஆம் தேதி வேளாண் சார்ந்த அறிக்கையும் வெளியிட்டது.

அதனைத் தொடர்ந்து பொது விவாதம் தற்போது நடைபெற்று வரும் நிலையில் சட்டசபையில் முதலமைச்சர் விஜயை புகழ்ந்து பாடும் விதமாக எம்.ஜி.ஆரின் பாடல்களை பாடி எம்எல்ஏக்கள் புகழ்ந்து வருகின்றனர். இந்நிலையில் இன்று நடைபெற்ற கூட்டத்தொடரில் அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் கார் வழங்கப்படும் என்றும் அதற்கான ஊழியர்கள் மற்றும் ஊதியமும் அரசாங்கமே வழங்கும் என்ற அறிவிப்பை வெளியிட்டார் முதலமைச்சர் விஜய்.

இதையடுத்து, முதலமைச்சர் விஜயின் அறிவிப்புக்கு பல்வேறு சட்டமன்ற உறுப்பினர்களும் நன்றி தெரிவித்தனர். அந்த வகையில், குடியாத்தம் தொகுதியைச் சேர்ந்த தவெக பெண் எம்.எல்.ஏ. கே.சிந்து, முதலமைச்சர் விஜய் அறிவித்த கார், உதவித்தொகை உள்ளிட்ட சிறப்பு சலுகைகளுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் எம்.ஜி.ஆர். நடித்த திரைப்படத்தில் இடம்பெற்ற, “கொடுத்ததெல்லாம் கொடுத்தான், அதை யாருக்காகக் கொடுத்தான்” என்ற பாடல் வரிகளை இரண்டு முறை பாடி முதலமைச்சர் விஜய்க்கு நன்றி தெரிவித்தார்.

இதற்கு முன்னதாக, தமிழ்நாடு சட்டப்பேரவையில் ஆகஸ்ட் 12 அன்று நடைபெற்ற கூட்டத்தொடரின் போதும் முதலமைச்சர் விஜயைப் பாராட்டும் வகையில் பாடல் இடம்பெற்றிருந்தது. அப்போது நிதியமைச்சர் மரியவில்சன், 

“கருணை இருந்தால் வள்ளல் ஆகலாம்,

கடமை இருந்தால் வீரன் ஆகலாம்.

பொறுமை இருந்தால் மனிதன் ஆகலாம்,

மூன்றும் இருந்தால் தலைவன் ஆகலாம்”

முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆரின் புகழ்பெற்ற பாடல் வரிகளைப் பாடி முதலமைச்சர் விஜயைப் பாராட்டினார்.

அதனைத் தொடர்ந்து, நிதிநிலை அறிக்கை மற்றும் வேளாண் அறிக்கை குறித்தான விவாதம் நடைபெற்று வருகையில் பல்வேறு சுவாரஸ்யமான சம்பவங்களும் சட்டபேரவையில் அரங்கேறி வரும் நிலையில் , தவெக எம்.எல்.ஏ. ஒருவர் தனது தொகுதி சார்ந்த பிரச்சனைகளை சட்டப்பேரவையில் எடுத்துரைத்தபோது, சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர் அந்தத் தொகுதியின் பெயரைக் குறிப்பிட்டு பாடல் பாடினார்.

மணப்பாறை தொகுதியின் தவெக எம்.எல்.ஏ. கதிரவன் பேசும்போது, “மணப்பாறை என்றாலே அனைவருக்கும் நினைவுக்கு வருவது மணப்பாறை முறுக்குதான். தமிழ்நாட்டைத் தாண்டி உலகம் முழுவதும் மணப்பாறை முறுக்குக்கு தனி அடையாளமும் தனி பெயரும் இருக்கிறது. ஆனால், பல ஆண்டுகளாக மாறி மாறி ஆட்சி செய்த இரண்டு திராவிட கட்சிகளும் மணப்பாறைக்கு முறுக்கை விட அதிகமாக கொடுத்தது அல்வாதான். மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகள் அல்வாவாகிப் போனது” என்று தெரிவித்தார்.

அப்போது குறுக்கிட்ட சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர், “உறுப்பினர் மணப்பாறை முறுக்கைப் பற்றி பேசினார். அந்தக் காலத்தில் மணப்பாறை பாடல் ஒன்று உள்ளது” என்று கூறினார். பின்னர், ‘மக்களைப் பெற்ற மகராசி’ திரைப்படத்தில் இடம்பெற்ற, “மணப்பாறை மாடு கட்டி, மாயவரம் ஏறு பூட்டி, வயக்காட்ட உழுது போடு சின்னக்கண்ணு” என்ற பாடல் வரிகளைப் பாடினார். சபாநாயகர் பாடல் பாடியபோது, முதலமைச்சர் விஜய் அதனை ரசித்துக் கேட்டார்.

இதனிடையே, நேற்று நடைபெற்ற சட்டப்பேரவை கூட்டத்தொடரில் பேசிய தவெக எம்.எல்.ஏ. தாஹிராவும் முதலமைச்சர் விஜயைப் பாடல் வரிகள் மூலம் பாராட்டினார். முதலமைச்சர் விஜயின் தாயார் பாடிய பாடல் வரிகளான, “ஏழைங்க பாழைங்க நெனச்சிப்புட்டா… நாளைக்கு நீங்களும் சி.எம்.தான்…” என்று பாடி முதலமைச்சர் விஜய்க்கு நன்றி தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

இவ்வாறு சட்டப்பேரவையில் தொடர்ந்து முதலமைச்சர் விஜயைப் புகழ்ந்து பாடல்கள் பாடப்படுவதும், அவருக்குப் பிடித்தமான தலைவராகக் கூறப்படும் எம்.ஜி.ஆரின் திரைப்படப் பாடல் வரிகளைப் பயன்படுத்தி அவரைப் பாராட்டுவதும் தற்போது அரசியல் களத்தில் பேசுபொருளாக மாறியுள்ளது.

ஒருபுறம், எம்.ஜி.ஆரைப் போல முதலமைச்சர் விஜயை நினைத்துக்கொண்டு ஆளுங்கட்சியைச் சேர்ந்த உறுப்பினர்கள் அவரைப் புகழ்ந்து பாடுவதாக கூறப்படும் நிலையில், மறுபுறம், “எப்படி எம்.ஜி.ஆருடன் முதலமைச்சர் விஜயை ஒப்பிடலாம்?” என்று அதிமுகவைச் சேர்ந்தவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருவதாக கூறப்படுகிறது.

இதனால், சட்டப்பேரவையில் தொடர்ந்து இடம்பெறும் விஜய் புகழ் பாடல்கள் மற்றும் எம்.ஜி.ஆர். பாடல் வரிகளைப் பயன்படுத்தி முதலமைச்சர் விஜயைப் பாராட்டும் நிகழ்வுகள் அரசியல் வட்டாரத்தில் புதிய விவாதத்தை ஏற்படுத்தியுள்ளன.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *