எந்த ஒரு விவகாரத்துக்கும் பல முகங்கள் இருக்கும். பல்வேறு நபர்களின் பார்வைகள் வேறுபட்டு இருக்கும். அவை அனைத்தையும் ஒரே பகுதியில் இணைக்கும் ஒரு முயற்சி தான், `களம்’
இந்த மினி தொடரில் நாம் பார்க்கப் போவது ’சட்டமன்றம் 2026″ பல்துறைகளை சார்ந்த பல்வேறு ஆளுமைகள் இந்த சர்ச்சை குறித்து விரிவாக தங்கள் கருத்துகளை முன்வைக்க உள்ளார்கள்.
சட்டமன்றம்’ என்றால் என்ன என்றே தெரியாமல் இருந்த ஒரு தலைமுறையிலிருந்து, தங்களுடைய செல்போனிலேயே சட்டமன்ற நடவடிக்கைகளை நேரடியாகப் பார்க்கும் தலைமுறைக்கு நாம் வந்துவிட்டோம். இந்த மாற்றத்தை நான் மிக முக்கியமானதாகப் பார்க்கிறேன்.
ஒரு காலத்தில் சட்டமன்றத்துக்குள் என்ன நடந்தது என்பதைத் தெரிந்துகொள்ள அடுத்த நாள் செய்தித்தாளுக்காகக் காத்திருக்க வேண்டியிருந்தது. இப்போது அப்படியில்லை. ஒரு எம்.எல்.ஏ எழுந்து பேசுவது முதல், அமைச்சர் பதிலளிப்பது வரை அனைத்தும் மக்களின் கண் முன்னால் நேரடியாக வந்து நிற்கிறது. இதன் மூலம், பத்தாம் வகுப்பு, பிளஸ்-டூ படிக்கும் மாணவர்களுக்குக்கூட ‘இவர்தான் எம்.எல்.ஏ… இவர்தான் அமைச்சர்’ என்று தெரியும் அளவுக்கு சட்டமன்றம் வீடுகளுக்குள் வந்துவிட்டது. என்னைப் பொறுத்தவரை, இது வெறும் சட்டமன்ற நேரலை அல்ல. ஒரு வகையில் இது அரசியல் கல்வி.

அதேநேரத்தில், நேரலை வந்த பிறகு சட்டமன்றத்தின் இன்னொரு முகமும் வெளிப்படையாகத் தெரிகிறது. உறுப்பினர்கள் எப்படி பேசுகிறார்கள், அமைச்சர்கள் எப்படி பதிலளிக்கிறார்கள், ஆளுங்கட்சி எப்படி நடந்து கொள்கிறது, எதிர்க்கட்சி எப்படி எதிர்வினையாற்றுகிறது என அனைத்தையும் மக்கள் நேரடியாகப் பார்க்கிறார்கள். அதனால், இன்றைய சட்டமன்றத்தைப் பார்க்கும்போது, நான் கடந்த கால சட்டமன்றங்களையும் சேர்த்துத்தான் பார்க்கிறேன்.
ஆளுங்கட்சி உறுப்பினர் எழுந்து முதலமைச்சரைப் பாராட்டுவது, கேள்வி கேட்க வேண்டிய நேரத்தில் நீண்ட நேரம் பாராட்டு உரை நிகழ்த்துவது, அதற்குப் பிறகு அமைச்சர் எழுந்து மீண்டும் பாராட்டுவது… இந்தக் காட்சிகள் எனக்கு புதிதல்ல.
குறிப்பாக, ஜெயலலிதா முதலமைச்சராக இருந்த காலத்தில் இதுபோன்ற காட்சிகளை நான் சட்டமன்றத்தில் பார்த்திருக்கிறேன். சில நேரங்களில் உறுப்பினர்கள் கேள்வி எழுப்ப, அதற்கு ஜெயலலிதா மேடம் நேரடியாகப் பதிலளித்ததோடு, அந்தக் கேள்விக்குப் பதிலாகவே புதிய திட்டங்களையும் அறிவித்திருக்கிறார். அந்தக் காலகட்டத்தில் கேள்வி நேரம் மிகவும் சுவாரஸ்யமாக இருக்கும்.