“ஜில்லா” மற்றும் “கத்தி” திரைப்படங்களை முதல் நாள் முதல் காட்சியில் பார்த்தேன். குறிப்பாக “கத்தி” திரைப்படத்தின் ஜீவானந்தம் கதாபாத்திரம் எனக்கு மிகவும் பிடித்தது. காதல், நகைச்சுவை, சண்டை, சமூகக் கருத்து என அனைத்தும் நிறைந்த ஒரு சிறந்த திரைப்படமாக அது அமைந்தது. இன்று வரை எனக்குப் பிடித்த விஜய் திரைப்படங்களில் “கத்தி” முக்கிய இடம் பெறுகிறது.
“புலி” திரைப்படத்திற்கு வந்த விமர்சனங்கள் என்னை வருத்தின. ஆனால் அடுத்த ஆண்டு வந்த “தெறி” திரைப்படம் அந்த வருத்தங்களை மறக்கச் செய்தது. இடைவேளையின்போது என் அண்ணன், “நீ புலி படத்தையே நூறு தடவை பாத்த; இத எத்தனை தடவை பாப்பியோ?” என்று கூறியபோது ஏற்பட்ட மகிழ்ச்சியை வார்த்தைகளால் விவரிக்க முடியாது.
அதன்பிறகு வெளியான அனைத்து திரைப்படங்களையும் குடும்பத்துடன் தவறாமல் திரையரங்கில் பார்த்தோம். விமர்சனங்கள் எப்படியிருந்தாலும், விஜய் திரைப்படம் என்றாலே மகிழ்ச்சியாக இருக்கும் என்ற நம்பிக்கை மட்டுமே எங்களிடம் இருந்தது.

எனக்கு மறக்க முடியாத திரையரங்கு அனுபவம் “மெர்சல்”. “பைரவா” திரைப்படத்திற்குப் பிறகு வெளியானதால் எதிர்பார்ப்பு அதிகமாக இருந்தது. மூன்று வேடங்கள், சமூகக் கருத்து மற்றும் சிறந்த நடிப்பு மூலம் அந்தப் படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. தளபதி விஜயின் திரைப்பயணத்தில் அடுத்த கட்டத்தை உருவாக்கிய திரைப்படங்களில் அதுவும் ஒன்று.
“பிகில்” திரைப்படத்தில் ராயப்பன் கதாபாத்திரம் என்னை மிகவும் கவர்ந்தது. முதல் நாள் முதல் காட்சிக்கான டிக்கெட் வாங்கும்போது ஏற்பட்ட தள்ளுமுள்ளுவில் சட்டை கிழிந்த அனுபவமும் இன்று வரை நினைவில் இருக்கிறது.
2020-ஆம் ஆண்டு கொரோனா ஊரடங்கு வந்தது. “மாஸ்டர்” திரைப்படத்தின் வெளியீடு தள்ளிப்போனது. ஒரு வருடம் கழித்து 2021-ல் விஜய் அண்ணாவை திரையில் பார்த்தபோது என்னை அறியாமல் கண்ணீர் வந்தது. அந்த உணர்வை வார்த்தைகளால் விவரிக்க முடியாது.
அதன்பிறகு வந்த “பீஸ்ட்” திரைப்படம் எதிர்பார்த்த அளவிற்கு அமையவில்லை என்றாலும், விஜய் அண்ணாவின் திரை ஆளுமையும் சண்டைக் காட்சிகளும் ரசிகர்களை கவர்ந்தன.
“வாரிசு” திரைப்படத்தில் நான் ரசித்து வளர்ந்த இளைய தளபதி விஜயை மீண்டும் பார்த்த மகிழ்ச்சி கிடைத்தது.
அதே ஆண்டில் வெளியான “லியோ” திரைப்படம் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. வித்தியாசமான கதாபாத்திரத்தில் விஜய் அண்ணா மிகச் சிறப்பாக நடித்திருந்தார். “வாரிசு” மற்றும் “லியோ” திரைப்படங்களின் முதல் நாள் முதல் காட்சியைப் பார்ப்பதற்காக செமஸ்டர் தேர்வு மதியம் இருந்தபோதும் காலைக் காட்சிக்குச் சென்றது என் கல்லூரி வாழ்க்கையின் மறக்க முடியாத நினைவுகளில் ஒன்றாகும்.