ஏன் பதவிக்கு போட்டியிடவில்லை?
என்.சந்திரசேகரனின் பதவிக் காலம் 2027-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்தோடு முடிவடைகிறது. இந்த நிலையில், கடந்த ஆகஸ்ட் மாதம், “என்னுடைய பதவி நீட்டிப்பிற்கு டாடா சன்ஸ் நிர்வாகக் குழு உறுப்பினர்களில் ஒருவர் ஆதரவு தெரிவிக்கவில்லை.
ஏகோபித்த ஆதரவு இல்லாத நிலையில், டாடா சன்ஸ் நிறுவனத்தின் தலைவர் பதவிக்கு மீண்டும் போட்டியிடமாட்டேன்” என்று அறிக்கை வெளியிட்டிருந்தார்.
என்.சந்திரசேகரன் கூறும் அந்த ஒருவர் டாடா அறக்கட்டளையின் தலைவர் நோயல் டாடாதான் என்று தெரியவருகிறது.
டாடா சன்ஸ் நிறுவனத்தின் கிட்டத்தட்ட 66 சதவீத பங்குகள் டாடா அறக்கட்டளையிடம்தான் இருக்கிறது. இது என்.சந்திரசேகரன் பதவி நீட்டிப்பு விஷயத்தில் நோயல் டாடாவின் கையை உயர்த்துகிறது.

நோயல் டாடாவிற்கு ஏன் பிடிக்கவில்லை?
டாடா சன்ஸ் நிறுவனத்தைப் பட்டியலிட வேண்டும் என்கிற முன்னெடுப்பை என்.சந்திரசேகரன் எடுக்கிறார். இது நோயல் டாடாவிற்குப் பிடிக்கவில்லை.
ஒரு நிறுவனம் பங்குச் சந்தையில் பட்டியலிடும் போது, அதன் விவரங்கள் பொதுவெளியில் வெளியிடப்படும். அது நோயல் டாடாவிற்குப் பிடிக்கவில்லை என்று கூறப்படுகிறது.
ஏர் இந்தியா நிறுவனம் டாடா குழுமத்தோடு இணைக்கப்பட்டிருக்கிறது. அந்த நிறுவனம் இன்னமும் நஷ்டத்தில்தான் போகிறது. ஆனால், இன்னும் அந்த நிறுவனத்தை விரிவாக்கம் செய்ய முதலீட்டாளர்களிடம் நிதி கேட்டிருக்கிறார் என்.சந்திரசேகரன்.
ஏற்கெனவே நஷ்டத்தில் செல்லும் நிறுவனத்திற்கு நிதி எதற்கு என்பதும் நோயல் டாடாவின் கேள்வியாக இருக்கிறது.
இதனால்தான், நோயல் டாடா என்.சந்திரசேகரனின் பதவி நீட்டிப்பிற்குத் தடையாக இருக்கிறார்.