International
oi-Vigneshkumar
சியாட்டில்: சந்திரன் மீதான ஆய்வுகள் கடந்த சில ஆண்டுகளாகவே தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இது சமீப காலங்களில் வேகமெடுத்துள்ள நிலையில், தனியார் முதலீடுகளும் அங்கு குவிந்து வருகிறது. அங்கு பல டிரில்லியன் டாலர் மதிப்பிலான வளங்கள் இருக்கலாம் என சொல்லப்படும் நிலையில், அதற்கு யார் உரிமை என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
சந்திரன் இனி வெறும் அறிவியல் ஆராய்ச்சிக்கான இடமாக மட்டும் பார்க்கப்படாது. பல டிரில்லியன் டாலர் மதிப்புள்ள புதிய பொருளாதார வாய்ப்பாக சந்திரனை உலக நாடுகள் பார்க்க தொடங்கியுள்ளன. 21ஆம் நூற்றாண்டின் விண்வெளி பொருளாதாரத்தை ஆதிக்கம் செலுத்த, சந்திரனில் உள்ள வளங்களை யார் கட்டுப்படுத்துகிறார்கள் என்பது முக்கிய கேள்வியாக மாறியுள்ளது.

சந்திரன்
சந்திரனில் உள்ள வளங்களை பிரித்தெடுப்பதே எதிர்கால விண்வெளி பொருளாதாரத்தின் முக்கிய இலக்குகளில் ஒன்றாக உள்ளது. இப்போது நவீன எலக்டிரானிக் சாதனங்களுக்கு தேவையான ரேர் எர்த் மெடல் சந்திரனில் அதிகளவில் இருப்பதாக கூறப்படுகிறது. அதேபோல் சந்திரனின் தென் துருவத்தில் நிரந்தரமாக நிழலில் இருக்கும் பள்ளங்களில் நீரும் கூட பனிக்கட்டி வடிவில் இருப்பதாக கூறப்படுகிறது. இந்த நீர் எதிர்கால விண்வெளி பயணங்களுக்கு மிகவும் முக்கியமானதாக இருக்கலாம். குறிப்பாக ராக்கெட் எரிபொருளை தயாரிக்க இந்த நீரை பயன்படுத்த முடியுமா என்பது குறித்தும் ஆய்வுகள் நடக்கும் என தெரிகிறது.
சந்திர வளங்கள்
சந்திர வளங்களில் மிகவும் முக்கியமானதாக கருதப்படுவது ஹீலியம்-3. பூமியில் மிகவும் அரிதாக காணப்படும் இந்த ஐசோடோப்பு சந்திரனில் அதிக அளவில் இருப்பதாக கூறப்படுகிறது. அணுக்கரு இணைவு எனப்படும் Nuclear Fusion தொழில்நுட்பத்தில் ஹீலியம்-3 பயன்படுத்தப்படலாம் என்பதே இதன் மீதான ஆர்வம் அதிகரிக்க முக்கிய காரணமாகும். தூய்மையான அணுக்கரு இணைவு ஆற்றலுக்கான சிறந்த எரிபொருளாக இது கருதப்படுகிறது. இதன் மூலம் பல நூற்றாண்டுகளுக்கு பூமிக்கு தேவையான எனர்ஜியை வழங்க முடியும் என கூறப்படுகிறது.
இப்போது சந்திரன் யாருக்கு என்பதில் அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையே புதிய விண்வெளிப் போட்டி உருவாகியுள்ளது. இரு நாடுகளும் 2030களின் தொடக்கத்தில் சந்திரனில் நிரந்தரமாக மனிதர்கள் தங்கக்கூடிய ஆராய்ச்சி தளங்களை அமைப்பதற்கான திட்டங்களை அறிவித்துள்ளன. இதனால் விண்வெளியில் ஆதிக்கம் செலுத்துவதற்கான போட்டி அடுத்த கட்டத்தை எட்டியுள்ளது. விண்வெளியில் எப்படி விண்வெளி மையத்தை அமைத்து ஆய்வு செய்கிறார்களோ, அது போல சந்திரனில் நீண்டகால தங்கி, ஆய்வு செய்ய வேண்டும் என்பதே இப்போது முக்கிய இலக்காக இருக்கிறது.
உலக நாடுகள்
இந்த போட்டியில் உலக நாடுகள் மட்டுமின்றி தனியார் விண்வெளி நிறுவனங்களும் களமிறங்கியுள்ளன. எலான் மஸ்கின் ஸ்பேஸ்எக்ஸ் மற்றும் அமேசான் நிறுவனர் ஜெஃப் பெசோஸின் ப்ளூ ஆரிஜின் போன்ற நிறுவனங்களும் கூட அதிக எடையை விண்வெளிக்கு எடுத்து செல்லக்கூடிய ராக்கெட்களை உருவாக்கி வருகின்றன. இந்த கட்டமைப்புகளை மேம்படுவதன் மூலம் விண்வெளிக்கு செல்வதற்கான செலவு குறைந்து, எதிர்காலத்தில் சந்திரனை மையமாகக் கொண்ட வர்த்தக நடவடிக்கைகளும் அதிகரிக்க வாய்ப்புள்ளது.
இப்படி பலரும் களத்தில் இறங்கியுள்ளதால் சந்திரனில் மனிதர்கள் தொடர்ந்து தங்குவதற்கான பணிகள் வேகமெடுத்து வருகின்றன. மாதிரி குடியிருப்புகள், ரோவர்கள் மற்றும் சந்திர தகவல் தொடர்பு செயற்கைக்கோள்கள் போன்ற தொழில்நுட்பங்கள் உருவாக்கப்பட்டு வருகின்றன. இதன் மூலம் இன்னும் சில ஆண்டுகளிலேயே சந்திரனில் நிரந்தர ஆய்வகம் அமைக்கப்படும் என தெரிகிறது.
வேகமெடுக்கும் ஆய்வுகள்
இப்படி சந்திரனை சுற்றியே ஆய்வுகள் வேகமெடுத்துள்ள நிலையில், சந்திரனில் இருக்கும் வளங்கள் பேசுபொருள் ஆகியுள்ள நிலையில், ஒரு முக்கியமான கேள்வியும் எழுகிறது. அதுதான் சந்திரனை யார் சொந்தம் என்பது! 1967ம் ஆண்டிலேயே இது குறித்து அவுட்டர் ஸ்பேஸ் ஒப்பந்தம் கையெழுத்தானது. அதன்படி எந்த நாடும் சந்திரன் உள்ளிட்ட விண்வெளி பொருட்களை தன்னுடைய பகுதியாக உரிமை கோர முடியாது.
அதேநேரம் இன்னொரு கேள்வியும் இப்போது எழுந்துள்ளது. சந்திரனை முழுமையாக யாரும் உரிமை கோர முடியாது. ஆனால் எதிர்காலத்தில் தனியார் நிறுவனங்கள் சந்திரனில் சுரங்க பணிகளை மேற்கொண்டால், அங்கு கிடைக்கும் வளங்களை யார் பயன்படுத்தலாம்.. அதற்கு யார் சொந்தம் என்ற கேள்வி எழுந்துள்ளது. அதற்கு இந்த பழைய சர்வதேச சட்டம் தெளிவான பதிலை வழங்கவில்லை. எனவே, வரும் காலத்தில் விண்வெளி ஆய்வு மட்டுமின்றி, இது குறித்த விவாதமும் தீவிரமடையவே போகிறது.

