“சனாதனத்தின் மீது கை வைத்தால் சும்மா விட மாட்டேன்..” அயோத்தி நன்கொடை விவகாரம்.. ஆவேசமாக பேசிய யோகி | Ayodhya Ram Mandir Donation Scam: UP CM Yogi Vows Strict Action After 8 Arrested For Malpractice

Spread the love

India

oi-Vigneshkumar

லக்னோ: அயோத்தி ராமர் கோயிலுக்குப் பக்தர்கள் வழங்கிய நன்கொடைகளில் முறைகேடு செய்ததாக 8 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், சனாதனம் மற்றும் பொதுமக்களின் நம்பிக்கையைச் சுரண்ட நினைப்பவர்கள் எவராக இருந்தாலும், அவர்களுக்கு எதிராக மிகக் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று உபி முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார்.

ராமர் கோவிலில் பக்தர்களால் வழங்கப்பட்ட காணிக்கைகள் மற்றும் நன்கொடைகளில் முறைகேடு நடந்ததாக எழுந்த புகாரைத் தொடர்ந்து, உத்தரப் பிரதேச காவல் துறை எட்டு பேரை அதிகாரப்பூர்வமாகக் கைது செய்துள்ளது. ஸ்ரீராம் ஜென்மபூமி தீர்த்த க்ஷேத்ரா அறக்கட்டளையின் அறங்காவலரான கிருஷ்ண மோகன் அளித்த புகாரின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Ayodhya Ram Mandir Donation Scam Ayodhya Ram Mandir

விளக்கம்

அங்குள்ள எதிர்க்கட்சியினர் இதைக் கையில் எடுத்து யோகி அரசை விமர்சித்து வருகிறார்கள். இதற்கிடையே சிறப்புப் புலனாய்வு குழுவினர் முதற்கட்ட அறிக்கை சமர்ப்பிக்கப்பட்ட உடனேயே இந்த விவகாரத்தில் கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டதாக யோகி ஆதித்யநாத் தெரிவித்தார். அயோத்தி தொடர்பான விஷயங்களில் எந்தவித சமரசமும் செய்து கொள்ளப்பட மாட்டாது என்றும் சனாதனத்தைச் சுரண்ட நினைப்போர் மீது கடுமையான நடவடிக்கை எடுப்போம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தேவரியாவில் நடைபெற்ற பொதுக்கூட்டம் ஒன்றில் உரையாற்றிய முதல்வர் யோகி ஆதித்யநாத், “அயோத்தியைப் பற்றி யாரும் கவலைப்பட வேண்டாம். சிறப்புப் புலனாய்வுக் குழுவின் அறிக்கை வெளியான உடனே நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மக்களின் ஆன்மீக நம்பிக்கையோடு விளையாடுவதை எக்காரணம் கொண்டும் சகித்துக் கொள்ள முடியாது. மேலும், இன்று இந்த விவகாரத்தைக் கையில் எடுத்து அரசியல் செய்ய முயல்வோர் ஒரு காலத்தில் ராமர் இருந்ததையே மறுத்தவர்கள் என்பதை நாம் மறந்துவிடக்கூடாது.

கடும் நடவடிக்கை

கடந்த ஜூன் 19 அன்று அயோத்திக்குச் சென்றபோதே, பொதுமக்களின் நம்பிக்கையைத் தவறாகப் பயன்படுத்துவதோ அல்லது கோடிக் கணக்கான மக்களின் ஆன்மீக உணர்வோடு தொடர்புடைய ஒரு புனிதத் தலத்திற்கு அவப்பெயரைக் கொண்டு வரும் வகையில் செயல்பட்டால் கடுமையான நடவடிக்கை எடுப்பேன் என எச்சரித்திருந்தேன். அதன்படியே கடுமையான நடவடிக்கை எடுத்துள்ளோம்.

அரசியல் காரணங்களுக்காக எதிர்க்கட்சிகள் இந்த விவகாரத்தை பெரிதாக்குகிறார்கள். கடந்த காலத்தில் ராமர் கோவில் இயக்கத்திற்கு எதிராகச் செயல்பட்டவர்கள் தான் இவர்கள். ஒரு காலத்தில் ராமரின் இருப்பையே மறுத்து, அயோத்தியின் அடையாளத்தையே சிதைக்க முயன்றவர்கள் இவர்கள்தான்! நீதிமன்றங்களில் ராமர் கோவில் கட்டுமானத்திற்கு எதிராக வழக்குப் போட்டவர்களும் ஜெய் ஸ்ரீ ராம் என்று முழக்கமிட்ட பக்தர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியவர்களும் இவர்கள்தான்! இன்று நம்பிக்கையில் முறைகேடு நடந்துள்ளதாகக் கூறுவது வேடிக்கையாக இருக்கிறது” என்றார்.

யோகி ஆதித்யநாத்

காங்கிரஸ் கட்சியை நேரடியாகக் குறிவைத்த முதல்வர் யோகி ஆதித்யநாத், “அந்தக் கட்சி ஊழலையும் நேர்மையற்ற தன்மையையும் தனது நிர்வாகத்தில் ஒரு அங்கமாகவே மாற்றியிருந்தது. தற்போது நடைபெறும் விசாரணையில் இருந்து மக்களின் கவனத்தைத் திசைதிருப்பவே இத்தகைய வீண் முயற்சிகள் மேற்கொள்ளப்படுகிறது.. கடந்த காலத்தில் ராமநவமி திருவிழாக்களின் போது பதற்றத்தை ஏற்படுத்தினர். கிருஷ்ண ஜென்மாஷ்டமி கொண்டாட்டங்களுக்கு கட்டுப்பாடுகளை விதித்தவர்கள், கன்வார் யாத்திரையைத் தடுத்தவர்கள், துர்கா பூஜையின் போது பதற்றத்தை உருவாக்கியவர்கள் தான் இன்று பழி சுமத்துகிறார்கள்” என்று அடுக்கடுக்கான குற்றஞ்சாட்டினார்.

என்ன நடந்தது!

இந்த விவகாரத்தில் அவினாஷ் சுக்லா, அனுகல்ப் மிஷ்ரா, லவ்குஷ் மிஷ்ரா, மனிஷ் குமார் யாதவ், கருணேஷ் பாண்டே, ராமாசங்கர் மிஷ்ரா, சுபாஷ் ஸ்ரீவஸ்தவா மற்றும் ராமசங்கர் யாதவ் என்கிற தின்னு ஆகிய எட்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

விசாரணையில் கோவில் நன்கொடை அமைப்பில் பல செயல்பாட்டுக் குறைபாடுகள் இருந்தது கண்டறியப்பட்டுள்ளது. பணத்தை கையாளுதல், ஊழியர்களின் பின்னணி சரிபார்ப்பு, சிசிடிவி கண்காணிப்பு என்று பல விஷயங்களில் குளறுபடிகள் இருந்துள்ளன. பணத்தை எண்ணும் பணியில் ஈடுபட்ட தற்காலிக ஊழியர்கள் ஒரு தனியார் நிறுவனம் மூலம் நியமிக்கப்பட்டாலும், அவர்கள் சிலரது பரிந்துரைகளின் அடிப்படையிலேயே பணியமர்த்தப்பட்டுள்ளனர் என்பது தெரியவந்துள்ளது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *