சனாதனம்: "இந்து மதத்தை இழிவுபடுத்திய பாவத்தால்தான்…" – முதல்வர் விஜய்க்கு நயினார் கேள்வி

Spread the love

தற்போதைய எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், கடந்த 2023-ம் ஆண்டு நடைபெற்ற ‘சனாதன ஒழிப்பு மாநாட்டில்’ சனாதனம் என்பது சமத்துவத்திற்கு எதிரானது என்றும், அதனை எதிர்ப்பதை விட ஒழிப்பதே சமூக நீதிக்கு நல்லது என்றும் அதிரடியாகப் பேசினார்.

இந்தப் பேச்சு அந்தச் சமயத்தில் இந்தியா முழுவதும் பெரும் விவாதத்தையும், பாஜக உள்ளிட்ட இந்து அமைப்புகளின் கடும் எதிர்ப்பையும் சம்பாதித்தது.

உதயநிதி ஸ்டாலின்
உதயநிதி ஸ்டாலின்

தற்போது 2026 சட்டமன்றத் தேர்தல் முடிவுகளின்படி, தவெக 108 இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது. திமுக கூட்டணியில் இருந்த சிபிஐ, சிபிஐஎம், விசிக உள்ளிட்ட கட்சிகளின் ஆதரவோடு தவெக ஆட்சியமைத்த சூழலில், புதிய சட்டசபையின் முதல் கூட்டத்தொடர் கூடியது.

அப்போது எம்.எல்.ஏ-க்கள் பதவியேற்பு மற்றும் உரையின் போது, எதிர்க்கட்சித் தலைவராக இருந்த உதயநிதி ஸ்டாலின், “வாழ்க தமிழ், வெல்க தமிழ்நாடு, மக்களைப் பிரிக்கும் சனாதனம் ஒழிய வேண்டும்” என்று மீண்டும் அதே முழக்கத்தை முன்வைத்தார்.

இந்தச் சூழலில், தவெக-வின் மதுரை மத்திய தொகுதி எம்.எல்.ஏ-வான முஸ்தஃபா, தமிழக அரசின் டாஸ்மாக் கடைகள் மூடுதல் தொடர்பான சாதனை குறித்துப் பேச பத்திரிகையாளர்களைச் சந்தித்தார்.

அப்போது இந்தியில் கேள்வி எழுப்பிய செய்தியாளர்கள், உதயநிதியின் சனாதன ஒழிப்புப் பேச்சு குறித்து தவெக-வின் நிலைப்பாடு என்னவென்று கேட்டனர். அதற்கு சற்றும் யோசிக்காமல் பதிலளித்த முஸ்தஃபா, “சனாதன தர்மத்தை ஒழிக்கத்தான் நாங்களும் அரசியலுக்கு வந்துள்ளோம்” என இந்தியில் உறுதிபடத் தெரிவித்தார்.

முஸ்தபா
முஸ்தபா

உதயநிதியைப் போலவே தவெக தரப்பிலும் சனாதன எதிர்ப்பு தீவிரமாக இருப்பதைச் சுட்டிக்காட்டி, அக்கட்சியின் மீதும் பாஜகவினர் கடும் கண்டனங்களை முன்வைத்து வருகின்றனர்.

அதன் அடிப்படையில் தமிழக பா.ஜ.க தலைவர் நயினார் நாகேந்திரன் தன் எக்ஸ் பக்கத்தில், “இது `சிறுபான்மையினர்களின் அரசு’ என்று நீங்கள் கூறிக்கொள்வது, பெரும்பான்மையினர்களை ஒடுக்கவா முதல்வரே? “சனாதனத்தை ஒழிப்பதற்காகவே களத்தில் இறங்கியுள்ளோம்” என்று தவெகவைச் சார்ந்த சட்டமன்ற உறுப்பினர் ஒருவர் பேசியிருப்பது வன்மையான கண்டனத்திற்குரியது. மக்களின் மதநம்பிக்கை குறித்து கண்டனத்திற்குரிய வகையில் பேசுவது தான் தவெக முன்வைக்கும் மாற்றமா?

தங்கள் கட்சியைச் சேர்ந்த தலைவர் ஒருவர் இந்து மக்களின் மனதைப் புண்படுத்தும் விதமாக கருத்து தெரிவிக்கும் போது, அதனைக் கண்டுகொள்ளாமலிருப்பது தான் “அனைவருக்குமான அரசு” என்று விளம்பரப்படுத்தும் ஒரு அரசின் லட்சணமா? ஆளுங்கட்சி என்ற நிலையில் இந்து மதத்தை இழிவுபடுத்திய பாவத்தால்தான் இன்று எதிர்க்கட்சி வரிசையில் அமர்ந்திருக்கிறது திமுக.

அதே வீழ்ச்சியைத் தவிர்க்கும் பொருட்டாவது, இது போன்ற தேவையற்ற கருத்துகளைத் தெரிவிப்பதை தவெக தவிர்க்க வேண்டும்! மேலும், மக்களின் மதநம்பிக்கைகளைக் காயப்படுத்திப் பேசிய கட்சி உறுப்பினர் மீதும் கடும் நடவடிக்கையை எடுப்பதோடு, இது போன்ற சம்பவம் மீண்டும் நடைபெறாது இருக்கும் வகையில் உரிய நடவடிக்கையையும் எடுக்க வேண்டும்” என்றார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *