Karuppu: "ஊழியர் ஒருவரின் தவறால்…" – கருப்பு படக் காட்சிகள் இணையத்தில் கசிந்தது எப்படி?

Spread the love

சூர்யாவின் ‘கருப்பு’ திரைப்படம் இன்று வெளியாவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், படத்திற்கு எழுந்துள்ள சிக்கல்களால் திரைப்படத்தின் முதல் காட்சியான 9 மணி ஷோ ரத்து செய்யப்பட்டிருக்கிறது.

நேற்றிரவே திரைப்படத்தின் ரிலீஸ் பாதிக்கப்படும் என இணையத்தில் பேசப்பட்டு வந்த நிலையில் இயக்குநர் ஆர்.ஜே. பாலாஜி, “எனது அன்பிற்குரிய ரசிகர்களே, தற்போதைய சூழல் குறித்து என்னிடம் உறுதியான பதில் ஏதுமில்லை. பிரச்னைகளைத் தீர்க்க தயாரிப்பாளர்கள் தங்களால் இயன்றவரை முயற்சி செய்து வருகிறார்கள். இந்தப் படத்திற்கு ஆரம்பத்திலிருந்தே பல தடைகள் வந்திருக்கின்றன.

`கருப்பு’ டீம்!
`கருப்பு’ டீம்!

ஆனால் ஏதோ ஒரு வகையில் கடவுள் அந்தத் தடைகளையெல்லாம் கடக்க வைத்து, 32 மாதங்களுக்குப் பிறகு இன்று நம்மை இங்கு கொண்டு வந்து சேர்த்திருக்கிறார்.

இந்த முறையும் அவர் மீது எனக்கு முழு நம்பிக்கை இருக்கிறது. கருப்பன் எல்லாத் தடையும் அடிச்சு உடைப்பான். ‘கருப்பு’ நாளைக்கு காலைல செமையா ரிலீஸ் ஆகும்..! நம்பிக்கை வைங்க, நடக்கும்…!!!” எனப் பதிவிட்டிருந்தார்.

ஆனால், இயக்குநர் போட்ட பதிவைத் தொடர்ந்து சில மணி நேரங்களிலேயே தயாரிப்பாளர் எஸ்.ஆர். பிரபு திரைப்படத்தின் முதல் காட்சி ரத்து செய்யப்படுவதாக அவருடைய எக்ஸ் பக்கத்தின் மூலம் அறிவித்தார்.

அதனைத் தொடர்ந்து வட மாநிலத்தில் சில பகுதிகளில் படத்தைத் திரையிட்டிருக்கிறார்கள். அதனால், படத்தின் சில காட்சிகளும் இணையத்தில் கசிந்திருக்கின்றன. இது தொடர்பாக ‘கருப்பு’ படத்தின் தயாரிப்பாளர் எஸ்.ஆர். பிரபு, தயாரிப்பாளர்கள் சங்கத்தினருடன், கியூப் அலுவலகத்திற்குச் சென்றிருக்கிறார்.

இது குறித்து விளக்கமளித்திருக்கும் நடப்பு தயாரிப்பாளர் சங்கத்தின் பொதுச் செயலாளர் டி.சிவா, “இன்று சூர்யாவின் ‘கருப்பு’ திரைப்படம் வெளியாக இருந்தது. சில காரணங்களால் அதன் வெளியீடு சற்றுத் தள்ளிப்போய்க்கொண்டிருக்கிறது.

இத்தகையச் சூழ்நிலையில் எதிர்பாராத விதமாக ஒரு அதிர்ச்சியான செய்தி வந்தது. மும்பை, புனே, வாரணாசி ஆகிய மூன்று இடங்களில் இப்படம் திடீரென்று திரையிடப்பட்டுள்ளது. அங்குத் திரைப்படம் ஓடுவதைப் பார்த்த ரசிகர்கள் பலர் நம்மைத் தொடர்பு கொண்டபோது எங்களுக்கு மிகுந்த அதிர்ச்சியாக இருந்தது.

தயாரிப்பாளர்கள் அனைவரும் இதனால் பெரும் அதிர்ச்சிக்குள்ளானோம். ஏனெனில், அங்கு படம் ஓடத் தொடங்கிய உடனேயே அதன் காட்சிகளை இணையத்தில் பகிரத் தொடங்கிவிட்டனர்.

T Siva - Vijay
T Siva – Vijay

உடனடியாக ‘கியூப்’ நிர்வாகத்தைத் தொடர்புகொண்டு, இதற்கு யார் காரணம் என்பது போன்ற விவரங்களைத் தெரிந்துகொள்வதற்கே ஒரு மணி நேரம் ஆகிவிட்டது. அதன்பிறகு அவர்களிடம் கூறிப் படத்தைத் திரையிடுவதை நிறுத்தினோம். ஏனெனில், இது அவர்களின் கவனத்திற்கே செல்லவில்லை.

நாங்கள்தான் இதைக் கண்டுபிடித்து, எந்தத் திரையரங்கு என்ற விவரங்களைச் சொன்ன பிறகு, ‘எங்கள் தரப்பில் தவறு நடந்துவிட்டது’ என்பதை அவர்கள் ஒப்புக்கொண்டனர். இருப்பினும், இது தொடர்பாக எங்களது கடுமையான கண்டனத்தைத் தெரிவித்துள்ளோம்.

உலகிலேயே மிகவும் பாதுகாப்பானது கியூப் தொழில்நுட்பம்தான் என்றும், அங்கிருக்கும் படம் எங்கும் கசியாது என்றும் எங்களுக்குப் பெரிய நம்பிக்கை இருந்தது. அந்த நம்பிக்கை உடைந்ததில் எங்களுக்கு மிகுந்த வருத்தம்.

இனிமேல் இதுபோன்ற தவறுகள் நடக்கக்கூடாது என்பதற்காகவும், இது எப்படி நடந்தது என்று விசாரிப்பதற்காகவும்தான் நாங்கள் இங்கு வந்துள்ளோம். அவர்கள் தங்கள் தரப்பு விளக்கத்தைக் கொடுத்துள்ளனர். நாங்களும் எங்களது கண்டனத்தைப் பதிவு செய்துள்ளோம்.

இருப்பினும், ஒரு திரைப்படத்திற்கு மிகப்பெரிய அநீதி இழைக்கப்பட்டுள்ளதாகவே நாங்கள் கருதுகிறோம். படம் எவ்வளவு நேரம் ஓடியது, இதன் பைரசி காபி இணையத்தில் எப்போது வெளிவருமோ என்கிற அச்சம் எங்களுக்கு உள்ளது.

140 கோடி ரூபாய் செலவில் எடுக்கப்பட்ட ஒரு திரைப்படத்திற்கு இத்தகைய நிலை ஏற்பட்டால், தயாரிப்பாளரின் கதி என்னாவது?

கருப்பு - சூர்யா
கருப்பு – சூர்யா

ஏற்கெனவே ஓடிடி வணிகம் சரிந்து, விலை பாதியாகக் குறைந்துள்ள நிலையில், இன்று தயாரிப்புச் செலவிற்கும் வணிகத்திற்கும் கட்டுப்படியாகாமல், படங்களை ரிலீஸ் செய்ய முடியாமல் தயாரிப்பாளர்கள் தடுமாறிக் கொண்டிருக்கிறார்கள்.

இவ்வளவு பெரிய நடிகர் நடித்த திரைப்படத்திற்கே இந்த நிலை என்றால், வருங்காலத்தில் இது எல்லாப் படங்களுக்கும் பொருந்தும். இனிமேல் ஒரு திரைப்படத்தை நிம்மதியாக வெளியிட முடியுமா என்கிற நிலைக்கு தமிழ் சினிமா தள்ளப்பட்டுவிட்டது.

எங்களது நம்பிக்கைக்குரிய கியூப் நிறுவனத்திலேயே இது நடந்தது மிகப்பெரிய அதிர்ச்சி. இதை அவர்கள் சரிசெய்ய வேண்டும். இதற்கு முறையான பதில் அளிக்க வேண்டும் என்றுதான் நாங்கள் கியூப் அலுவலகத்திற்கு வந்துள்ளோம்.

நிதியாளர்கள் தரப்பிலிருந்து அதிக அழுத்தம் இருக்கும்போது, இதுபோன்ற தொழில்நுட்பத் தரப்பிலும் சிக்கல்கள் வந்தால் தயாரிப்பாளர் எங்குச் செல்வார்? இதை எப்படிச் சமாளிப்பது என்று தெரியவில்லை. கியூப் நிறுவனத்தில் ‘தவறு நடந்துவிட்டது, எங்களது 20 ஆண்டு கால வரலாற்றில் இது போன்ற தவறு இதுவரை நடந்ததில்லை, ஊழியர் ஒருவரின் தவறால் இது நேர்ந்துவிட்டது’ என்று கியூப் தரப்பில் விளக்கம் அளிக்கிறார்கள்.

கருப்பு - சூர்யா
கருப்பு – சூர்யா

ஆனால், அதை எங்களால் ஏற்க முடியாது. ஊழியரின் கவனக்குறைவு 140 கோடி ரூபாய் மதிப்பிலான ஒரு திரைப்படத்தின் தலையெழுத்தை முடிவு செய்வதா? எங்களது கடுமையான கண்டனத்தைப் பதிவு செய்துள்ளோம்.

இந்தப் பாதிப்பை எப்படிச் சரிசெய்யப் போகிறீர்கள் என்றும், இதற்கான இழப்பீட்டையும் நாங்கள் கோரியுள்ளோம். ஏனெனில் இது மிகப்பெரிய இழப்பாகும். கேடிஎம் வழங்கப்பட்டதால்தான் படம் திரையிடப்பட்டுள்ளது என்பதை அவர்களும் ஒப்புக்கொள்கிறார்கள்” எனக் கூறியிருக்கிறார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *