
தமிழ்நாடு சட்டப்பேரவையில் நேற்று(செப்.,07) முதலமைச்சர் விஜய் அளித்த பதிலுரையில் திமுகவை கடுமையாக விமர்சித்து பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்திருந்தார்.
இந்த நிலையில், இன்று சட்டப்பேரவை கூடியதும் முதலமைச்சரின் பேச்சில் இடம்பெற்ற சில கருத்துகளை அவைக்குறிப்பில் இருந்து நீக்க வேண்டும் என திமுக உறுப்பினர்கள் வலியுறுத்தினர். ஆனால், முதலமைச்சர் பேசிய கருத்துகளை அவைக்குறிப்பில் இருந்து நீக்க முடியாது என சபாநாயகர் திட்டவட்டமாக தெரிவித்தார். இதற்கு திமுக உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
சபாநாயகர் இருக்கை முன்பு திரண்ட திமுக எம்.எல்.ஏ.க்கள், முதலமைச்சரின் பேச்சை அவைக்குறிப்பில் இருந்து நீக்க வேண்டும் என வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர். தொடர்ந்து அவர்கள் அங்கேயே அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டதால் அவையில் பரபரப்பு ஏற்பட்டது.
நிலைமை தொடர்ந்து நீடித்த நிலையில், அமளியில் ஈடுபட்ட திமுக உறுப்பினர்களை அவையில் இருந்து வெளியேற்ற சபாநாயகர் உத்தரவிட்டார். இதையடுத்து அவைக் காவலர்கள் திமுக உறுப்பினர்களை வெளியேற்றினர்.
இதற்கிடையே, சட்டப்பேரவையில் திமுக உறுப்பினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்த காட்சிகள் தொடர்பாக மற்றொரு விவாதமும் எழுந்துள்ளது.
துறைமுகம் தொகுதி திமுக எம்.எல்.ஏ.வும் முன்னாள் அமைச்சருமான சேகர்பாபு, தனது செல்போனை பயன்படுத்தி அவைக்குள் இருந்தபடியே ஏதோ காட்சியை பதிவு செய்ததாக சமூக வலைதளங்களில் சிலர் குற்றம்சாட்டி வருகின்றனர்.
https://x.com/saijegadheeshh/status/2097216563720188202?s=20
சட்டப்பேரவை நிகழ்வுகள் நேரலையில் ஒளிபரப்பாகிக் கொண்டிருந்த சூழலில், சேகர்பாபு ஏன் செல்போனில் பதிவு செய்தார் என்ற கேள்வியும் எழுப்பப்படுகிறது.
அவர் என்ன காட்சியை பதிவு செய்தார்? யாரை அல்லது எதை பதிவு செய்தார்? அந்த பதிவு எதற்காக மேற்கொள்ளப்பட்டது? பின்னர் அந்த வீடியோ எங்கு பயன்படுத்தப்பட்டது? என பல்வேறு கேள்விகளை சமூக வலைதளங்களில் சிலர் முன்வைத்து வருகின்றனர்.
எனினும், சேகர்பாபு உண்மையில் வீடியோ பதிவு செய்தாரா? இல்லை இது யூகமா? என்பது அவரிடமிருந்து அதிகாரப்பூர்வ விளக்கம் வெளியாகவில்லை.
இதனால், சட்டப்பேரவையில் ஏற்பட்ட அமளிக்கு மத்தியில் சேகர்பாபுவின் செல்போன் பதிவு தொடர்பான காட்சியும் தற்போது அரசியல் மற்றும் சமூக வலைதள விவாதமாக மாறியுள்ளது.