வீட்டு வேலைகளைச் செய்வதில் ஆண் – பெண் பாகுபாடு பார்க்கக்கூடாது என்று பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா தெரிவித்துள்ளார்.
சமையல் மற்றும் சுத்தம் போன்ற வேலைகளை ஒரு பெண்ணின் கடமையாகப் பார்க்கக்கூடாது என்றும், அதற்குப் பதிலாக, பாலின பாகுபாடு பார்க்காமல், ஒவ்வொரு வயது வந்தவரும் செய்ய வேண்டிய அத்தியாவசிய பணி என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
பிரியங்கா சோப்ரா இது தொடர்பாக அளித்துள்ள பேட்டியில், ”பெண்கள் வீட்டுப் பொறுப்புகளை நிர்வகிக்க வேண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதே நேரத்தில் ஆண்கள் பெரும்பாலும் அவற்றிலிருந்து விலக்கு அளிக்கப்படுகிறார்கள்.
வீட்டு வேலைகளை பாலினத்துடன் இணைக்கக்கூடாது. சுத்தம் செய்வதும், சமைப்பதும் பெண்களின் வேலையல்ல. அவை வயது வந்தோருக்கான அடிப்படை வேலை. சோம்பேறித்தனத்துடன் பாலினத்தைக் குழப்ப வேண்டாம்.

பொழுதுபோக்குத் துறையை தொழில்நுட்பம் பெரிய அளவில் மாற்றியுள்ளது. திரைப்படத் தயாரிப்பு முன்பை விட எளிதாகி இருக்கிறது. நீங்கள் திரைப்படத் தயாரிப்பில் இறங்க விரும்பினால், நீங்கள் எந்தத் துறையில் இருக்க விரும்புகிறீர்கள் என்பதைக் கண்டுபிடிக்க வேண்டும்.
தொழில்துறையில் நுழைவது மிகவும் கடினமானது. டிஜிட்டல் பிளாட்ஃபார்ம்கள் திரைப்படத் தயாரிப்பு தொடர்பான எதார்த்தத்தை மாற்றிவிட்டது. படைப்பாளிகள் பாரம்பர்ய தொழில் கட்டமைப்புகளை நம்பாமல் நேரடியாக பார்வையாளர்களிடம் தங்கள் கருத்துக்களைக் கொண்டு வர அனுமதிக்கிறது.
இப்போது உங்களுக்கு ஒரு யோசனை இருப்பதாக உணர்ந்தால், அதை வீடியோவாக மாற்றி அதை யூடியூப்பில் வெளியிடலாம்” என்று தெரிவித்தார்.
பிரியங்கா சோப்ரா சினிமாவில் மிகவும் பிஸியான இருக்கிறார். புதிய படம் ஒன்றில் ஹாலிவுட் நடிகை ஏஞ்சலினா ஜோலியுடன் இணைந்து செயல்படப் போவதாக அவர் சமீபத்தில் தெரிவித்தார். இது தவிர பிரியங்கா அடுத்ததாக எஸ்.எஸ்.ராஜமௌலியின் வாரணாசி படத்தில் மகேஷ் பாபு மற்றும் பிருத்விராஜ் சுகுமாரன் ஆகியோருடன் இணைந்து நடிக்கிறார்.