டெல்லி, பஞ்சாப், ஹரியானா போன்ற மாநிலங்களில் பிஷ்னோய் கூட்டத்தினர் குற்றச்செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். இதில் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் லாரன்ஸ் பிஷ்னோய் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளான். ஆனால் அவனது கூட்டாளிகள் வெளியில் இருந்து கொண்டு குற்றச்செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
அவனது கூட்டாளிகள் வெளிநாடுகளிலும் இருக்கின்றனர். ஹரியானாவில் ஜிம் உரிமையாளர் ஒருவரை பிஷ்னோய் கூட்டத்தினர் சுட்டுக்கொலை செய்துள்ளனர். அதிகாலை 5:30 மணியளவில் ஹரியானாவின் ஹன்சியில் உள்ள ஃபவ்வாரா சௌக் அருகே இந்த சம்பவம் நடந்துள்ளது.
பைக்கில் ஹெல்மெட் அணிந்து வந்த இரண்டு பேர் இளைஞர்கள் மற்றும் பெண்களுக்கான உடற்பயிற்சி மையமான ஜிம் நடத்தி வந்த கபில் மீது 10 ரவுண்டுகள் சுட்டனர். வெறும் 5 விநாடியில் 10 ரவுண்ட் சுடப்பட்டதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மிகவும் அருகில் நின்று கபிலின் முதுகு மற்றும் தலையை குறிவைத்து துப்பாக்கியால் சுட்டனர்.
இதில் சம்பவ இடத்திலேயே கபில் உயிரிழந்தார். துப்பாக்கிச் சூட்டின் போது, அருகில் நின்றுகொண்டிருந்த ஷிகா என்ற பெண் காயம் அடைந்தார். சிகிச்சைக்காக ஹிசாரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார்.
தாக்குதலை நடத்தியவர்கள் அங்கிருந்து தப்பிச் சென்றுவிட்டனர். இந்த சம்பவத்தின் சிசிடிவி காட்சிகளும் வெளியாகியுள்ளன. இந்த கொலை சம்பவம் குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணைக்காக அப்பகுதியை சீல் வைத்தனர். வழக்கின் தீவிரத்தை கருத்தில் கொண்டு, விசாரணை சி.ஐ.ஏயிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இக்கொலை தொடர்பாக லாரன்ஸ் பிஷ்னோய் கும்பலைச் சேர்ந்த ஹரி பாக்ஸர் வெளியிட்டுள்ள ஆடியோ செய்தி வைரலாகி இருக்கிறது. ஆடியோவில், ஹரி இக்கொலைக்கு தானும், ஆர்.டி.தலிவால், ஹர்மன் சந்து மற்றும் விக்ரம் ஆகியோர் பொறுப்பேற்பதாக தெரிவித்துள்ளான்.
மேலும் மேலும், கபில் ஷேக்புரா தாரிக்புரியாவில் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் ஈடுபட்டவர்களை முழுமையாக ஆதரித்ததாகவும், அவரை இரண்டு முறை தங்கள் கூட்டாளியான சுந்தர் ஹன்சி மூலம் எச்சரித்ததாகவும், ஆனால் அவர் அந்த எச்சரிக்கைகளை புறக்கணித்ததாகவும் தெரிவித்துள்ளான். அதோடு பாலிவுட் நடிகர் சல்மான் கானும் நெருங்கி பழகுபவர்களுக்கு எந்தபாதுகாப்பு கொடுத்தாலும் அவர்களை காப்பாற்ற முடியாது என்றும் மிரட்டியுள்ளான்.