International
oi-Mani Singh S
ரியாத்: சவுதி அரேபியாவின் ரியாத் விமான நிலையத்தில் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தாக்குதல் நடத்தியுள்ளது. டிரோன் தாக்குதலால் விமான நிலையத்தில் இருந்து கரும்புகை வெளியேறி வருகின்றன. இதனால் ரியாத் சர்வதேச விமான நிலையத்தில் விமான சேவை பாதிப்பு ஏற்பட்டுள்ளது. 4 ஆண்டுகளுக்கு பிறகு சவுதி அரேபியா மீது ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தாக்குதல் நடத்தியதால் பதற்றம் அதிகரித்துள்ளது.
மத்திய கிழக்கில் உள்ள ஏமனில் உள்நாட்டுப் போர் தீவிரமடைந்துள்ளது. இதையடுத்து ஈரான் ஆதரவு பெற்ற ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கும், சவுதி அரேபிய ஆதரவு பெற்ற அரசுப் படைகளுக்கும் இடையே அங்கு தீவிர மோதல் நடைபெற்று வருகிறது. இந்த மோதலின் தொடர்ச்சியாக ஹவுதி கிளர்ச்சிப்படை சவுதி அரேபியாவையும் குறிவைத்து தாக்குதல்களை நடத்தி வருகிறது.

கடந்த இரு தினங்களுக்கு முன்பாக சவுதி அரேபியாவின் எப் 15 ஜெட் விமானத்தை சுட்டு வீழ்த்தியதாக வீடியோவை வெளியிட்டு சர்வதேச அளவில் ஹவுதி கிளர்ச்சிக்குழு பரபரப்பை கிளப்பியிருந்தது. இந்த நிலையில், கடந்த 4 ஆண்டுகளில் முதல் முறையாக சவுதி அரேபியாவின் ரியாத்தில் உள்ள கிங் காலித் சர்வதேச விமான நிலையத்தின் மீது டிரோன்களை கொண்டு ஹவுதி கிளர்ச்சிக்குழு தாக்கியுள்ளது.
ஜெட் விமானம் ஒன்றின் எரிபொருள் தொட்டி மீது டிரோன்கள் தாக்கியதில் விமான நிலையத்தில் இருந்து கரும்புகைகள் வெளியேறும் காட்சிகள் சமூக வலைத்தளத்தில் பரவி வருகின்றன. விமான சேவையும் கடுமையாக பாதிக்கப்பட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. எனினும், இந்த சம்பவம் தொடர்பாக சவுதி அரேபியா தரப்பில் இருந்து தற்போது வரை அதிகாரப்பூர்வ தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.