India
-Vigneshkumar
அமராவதி: இந்திய அரசியலில் சமீப காலமாக கரப்பான் பூச்சி கட்சி என்ற பெயர் சமூக வலைத்தளங்களிலும், இளைஞர்கள் மத்தியிலும் அதிக கவனம் பெற்று வருகிறது. இதற்கிடையே ஆந்திரப் பிரதேச துணை முதலமைச்சரும், ஜனசேனா கட்சித் தலைவருமான பவன் கல்யாண், இந்த இயக்கம் குறித்தும், இன்றைய இளைஞர்களின் அரசியல் மனநிலை குறித்தும் தனது கருத்துக்களைப் பகிர்ந்துள்ளார்.
கடந்த சில காலமாகவே நாடு முழுக்க கரப்பான் பூச்சி ஜனதா கட்சி பெரும் அதிர்வலைகளை உருவாக்கி வருகிறது. முதலில் ஆன்லைனில் மட்டுமே தங்கள் எதிர்ப்பைக் காட்டி வந்த கரப்பான் பூச்சி கட்சியினர் இப்போது களத்திலும் இறங்கி போராட்டம் நடத்தி வருகிறார்கள். கல்வி சீர்கேடுகளைக் கண்டித்து டெல்லி, பெங்களூரில் போராட்டம் நடத்தியுள்ள கரப்பான் பூச்சி கட்சியினர், நாடு முழுக்க இந்த போராட்டத்தை நடத்தவுள்ளனர்.

கரப்பான் பூச்சி
இந்த கட்சி குறித்து, குறிப்பாக முதலில் இந்தப் பெயர் எப்படி வந்தது என்பதைப் புரிந்துகொள்வது அவசியம். உச்ச நீதிமன்ற நீதிபதி சூர்யகாந்த், சில இளைஞர்களைக் குறிப்பிட ‘கரப்பான் பூச்சி’ என்ற வார்த்தையைப் பயன்படுத்தியதாகக் கூறப்படுகிறது. இதற்கு ஒரு பதிலாகவே இளைஞர்கள் ஒன்றிணைந்து ‘கரப்பான் ஜனதா கட்சி’ என்ற பெயரில் ஒரு இயக்கத்தைத் தொடங்கினர். இது ஒரு அதிகாரப்பூர்வ அரசியல் கட்சி என்பதை விட, இளைஞர்களின் அதிருப்தியை வெளிப்படுத்தும் ஒரு தளமாகப் பார்க்கப்படுகிறது.
பவன் கல்யாண்
இந்த இயக்கம் குறித்து ஆந்திரப் பிரதேச துணை முதலமைச்சரும், ஜனசேனா கட்சித் தலைவருமான பவன் கல்யாணிடம் சில கேள்விகள் எழுப்பப்பட்டது. இது ஒரு புதிய விஷயம் இல்லை எனச் சொல்லும் பவன் கல்யாண் கடந்த காலங்களிலும் இதுவே நடந்துள்ளதாக குறிப்பிடுகிறார். இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில், ஒவ்வொரு தலைமுறையும் அரசியலையும் சமூகத்தையும் தங்களுக்கு ஏற்றவாறு மறுவரையறை செய்ய விரும்புகிறது. இது ஒரு சுழற்சி முறை.
1920கள், 1940கள் என ஒவ்வொரு 25 முதல் 30 ஆண்டுகளுக்கும் ஒரு புதிய தலைமுறை உருவாகிறது. 80-களிலும், 2000-களிலும் இளைஞர்கள் தங்களின் புதிய சிந்தனைகளை முன்வைத்தனர். அதேபோலவே, இப்போதுள்ள ‘ஜென் ஜி’ தலைமுறையினரும் தங்களின் அபிலாஷைகளுக்கு ஏற்ப அரசியலை மாற்ற விரும்புகிறார்கள். இளைஞர்களின் இந்தச் செயல்பாடுகளைப் புறந்தள்ளக் கூடாது. அவர்கள் ஏன் கோபமாக இருக்கிறார்கள் என்பதற்கான காரணத்தை நாம் பார்க்க வேண்டும்” என்று அவர் கூறினார்.
சாக்கடையில் இருக்க வேண்டியது
கரப்பான் பூச்சி என்ற பெயரைக் குறிப்பிட்டுப் பேசிய அவர், “கரப்பான் பூச்சி என்பது சாக்கடையில் வசிப்பது… அதன் மூலம் அவர்கள் அனுபவிக்கும் வலியை என்னால் புரிந்துகொள்ள முடிகிறது” என்று தெரிவித்தார். அதாவது, சமூகத்தின் விளிம்பு நிலையில் இருக்கும் இளைஞர்களின் வேதனையை அந்தப் பெயர் பிரதிபலிப்பதாக அவர் கருதுகிறார்.
இன்றைய இளைஞர்கள் இத்தகைய இயக்கங்களை எப்படிப் பார்க்கிறார்கள் என்பதைத் தெரிந்துகொள்ள, பவன் கல்யாண் தனது மகனிடமே இது குறித்துக் கேட்டதாகவும் குறிப்பிட்டார். அவர் மேலும், “இன்று காலை என் மகனிடம் பேசிக்கொண்டிருந்தபோது, அவனது நண்பர்கள் வட்டத்தில் எத்தனை பேர் இதில் ஆர்வம் காட்டுகிறார்கள் என்று கேட்டேன். அவனது 20 நண்பர்கள் கொண்ட குழுவில், மூன்று பேர் இந்த இயக்கத்தில் தங்களை இணைத்துக் கொண்டுள்ளதாகத் தெரிவித்தான்” என்று பவன் கல்யாண் கூறினார்.
இளைஞர்கள் விரும்பும் மாற்றம்
இளைஞர்கள் வெளிப்படையாகப் போராட்டத்தில் இறங்காவிட்டாலும், தங்களின் அதிருப்தியைத் தெரிவிக்க இத்தகைய தளங்களைப் பயன்படுத்துகிறார்கள் என்பதை இது காட்டுகிறது. இளைஞர்கள் ஏன் வழக்கமான அரசியலை வெறுக்கிறார்கள் என்பதையும் பவன் கல்யாண் சுட்டிக்காட்டினார். வழக்கமான, சலிப்பைத் தரும் அரசியல் முறைகள், பிராந்திய வாதங்கள் மற்றும் பிரித்தாளும் அரசியல், அழிவுப் பாதையிலான மோதல்களை இளைஞர்கள் வெறுப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்,
அதாவது பவன் கல்யாணின் கருத்துப்படி, ‘காக்ரோச் ஜனதா கட்சி’ போன்ற இயக்கங்கள் வெறும் தற்காலிகமானவை அல்ல.. மேலும், அரசியலில் புதிய விஷயமும் இல்லை. அவை இந்திய அரசியலில் ஏற்படப்போகும் ஒரு பெரிய மாற்றத்திற்கான சிக்னல். இளைஞர்கள் தங்களின் எதிர்ப்பைக் காட்ட ஒரு தளத்தைத் தேடுகிறார்கள். அவர்கள் விரும்புவது எல்லாம் நேர்மையான ஒரு புதிய அரசியல் மாற்றத்தைத்தான்.

