இயக்குநர் பா.ரஞ்சித் இயக்கத்தில் நடிகர் ஆர்யா நடித்த ‘சார்பட்டா பரம்பரை’ திரைப்படம் 2021-ஆம் ஆண்டு ஓடிடி தளத்தில் வெளியாகி ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது. வடசென்னையின் குத்துச்சண்டை கலாச்சாரத்தை மையமாகக் கொண்டு உருவான இந்தப் படம், விமர்சன ரீதியாகவும் வணிக ரீதியாகவும் பாராட்டுகளை பெற்றது. பசுபதி, ஜான் விஜய், ஜான் கொக்கேன், ஷபீர் உள்ளிட்டோரின் கதாபாத்திரங்களும் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தன.
முதல் பாகத்தின் வெற்றியைத் தொடர்ந்து ‘சார்பட்டா பரம்பரை 2’ திரைப்படம் உருவாகும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. ஆனால், பல்வேறு காரணங்களால் படப்பிடிப்பு தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டது.
இந்நிலையில், படத்தின் கதை தொடர்பாக புதிய தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, ‘சார்பட்டா பரம்பரை 2’ முதல் பாகத்தின் தொடர்ச்சியாக இல்லாமல், அதற்கு முந்தைய காலகட்டத்தில் நடந்த சம்பவங்களை மையமாகக் கொண்ட ப்ரீக்வெல் (Prequel) கதையாக உருவாக உள்ளதாக கூறப்படுகிறது.
இந்தப் படம் 1940 மற்றும் 1950-களின் சென்னை பின்னணியில் அமைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அக்காலகட்டத்தின் குத்துச்சண்டை கலாச்சாரம், சமூக வாழ்க்கை மற்றும் அரசியல் சூழலை மையமாக வைத்து திரைக்கதை உருவாக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
மேலும், படத்தின் படப்பிடிப்பு வரும் ஆகஸ்ட் 13-ஆம் தேதி தொடங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை படக்குழு விரைவில் வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. ‘சார்பட்டா’ உலகத்தின் தொடக்கக் கதையை இந்தப் படம் சொல்லுமா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.


