ஒருமுறை அவர் காரில் செல்லும்போது, சேறும் சகதியுமாக இருந்த ஒரு பள்ளத்தில் கார் சக்கரம் இறங்கி, அருகில் நடந்து சென்ற பள்ளி மாணவர்கள் மீது சகதி வாரி இறைக்கப்பட்டது. இதனால் குற்ற உணர்ச்சி அடைந்த அவர், உடனடியாக அதிகாரிகளைத் தொடர்புகொண்டு அந்தப் பள்ளத்தை மூடச் செய்தார்.
சில நாள்கள் கழித்து, அதே போன்றதொரு பள்ளத்தில் ஆட்டோ ஒன்று சிக்கி விபத்துக்குள்ளாவதை நேரில் கண்டார். இன்னொருநாள், இருசக்கர வாகனத்தில் சென்ற ஒருவர் சாலைப் பள்ளத்தில் தடுமாறி விழ, பின்னால் வந்த அரசுப் பேருந்து அவர் மீது ஏறிச் சென்றது. அந்த இளைஞர் சம்பவ இடத்திலேயே பலியானார்.

இந்த மரணம் கங்காதர திலக் அவர்களை உறங்க விடாமல் செய்தது. “அரசாங்கம் செய்யும், அதிகாரிகள் செய்வார்கள் என இனி காத்திருப்பதில் அர்த்தமில்லை; நாமே களத்தில் இறங்க வேண்டும்’’ என முடிவெடுத்தார்.
ஜனவரி 2011-ல், திலக் தனது ஓய்வூதியப் பணத்தை முழுவதுமாக இதற்காகச் செலவிடத் தொடங்கினார். தனது காரின் பின்பகுதியில் காலி சாக்குப்பைகள், தார், ஜல்லிக் கற்கள், மண்வெட்டி, கடப்பாரை ஆகியவற்றை நிரப்பிக் கொண்டு ஹைதராபாத் வீதிகளில் சுற்றத் தொடங்கினார்.