Cricket
oi-Yogeshwaran Moorthi
சென்னை: சிஎஸ்கே அணியின் பங்குதாரராக மாற தோனி விருப்பம் தெரிவித்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. அதன்படி சிஎஸ்கே அணியின் 25 சதவிகித பங்குகளை கொடுக்க வேண்டும் என்று தோனி டிமாண்ட் வைத்ததாகவும், அதற்கு சிஎஸ்கே அணி நிர்வாகம் மொத்தமாக 5.5% பங்குகளை மட்டுமே கொடுக்க முன் வந்திருப்பதாகவும் தகவல் கசிந்துள்ளது.
சிஎஸ்கே அணி தனது அடுத்த பயிற்சியாளருக்கான தேடுதலில் இறங்கி இருக்கிறது. அந்த அணியின் சிஇஓ காசி விஸ்வநாதன், சென்னை அணிக்கு வெளிநாட்டு பயிற்சியாளர் தான் பரிசீலனையில் இருப்பதாக கூறி இருந்தார். இதனால் இயன் மோர்கன், ஆடம் வோஜஸ், மெக்கல்லம் உள்ளிட்டோரின் பெயர்களை ரசிகர்கள் ஆலோசித்து வருகின்றனர்.

இருப்பினும் சிஎஸ்கே அணியின் ஆலோசகராக தோனி நியமிக்கப்பட வாய்ப்பு உள்ளதாக பேச்சுகள் எழுந்துள்ளன. இதன் மூலமாக சிஎஸ்கே அணியின் பிராண்ட் வளர்ச்சியை தக்க வைத்து கொள்ள முடியும். அதேபோல் பேட்டிங் மற்றும் பவுலிங் பயிற்சியாளர்களை வைத்தே தோனியால் சிஎஸ்கே அணியை வழிநடத்த முடியும் என்றும் பார்க்கப்படுகிறது.
ஆனால் அந்த பதவியை ஏற்க தோனி மிகப்பெரிய டிமாண்ட் ஒன்றை வைத்திருப்பதாக சொல்லப்படுகிறது. அதாவது சிஎஸ்கே அணியின் பங்குதாரராக மாற தோனி விருப்பம் தெரிவித்திருக்கிறார். அதன்படி சிஎஸ்கே அணியின் 25% பங்குகளை வாங்க ஆர்வம் காட்டி இருக்கிறார். ஆனால் சிஎஸ்கே அணியோ அவ்வளவு பங்குகளை கொடுக்க விரும்பவில்லை.
இதன்பின் 2வது சுற்றி பேச்சுவார்த்தையில் தோனி 20% பங்குகளை கேட்டிருக்கிறார். அதற்கு சிஎஸ்கே அணி நிர்வாகமோ 4% வரை கொடுக்க முன் வந்திருக்கிறது. தொடர்ந்து 3வது கட்ட பேச்சுவார்த்தையில் தோனி 18% பங்குகளை கேட்க, அதற்கு சிஎஸ்கே நிர்வாகம் 5.5% பங்குகள் வரை கொடுக்க முன் வந்திருக்கிறது. இந்த பேச்சுவார்த்தை முடிவுக்கு வந்துவிட்டது தொடர்பாக இதுவரை எந்த தகவலும் வெளியாகவில்லை.
இதனால் சிஎஸ்கே அணிக்காக அடுத்த சீசனில் தோனி விளையாடுவாரா அல்லது ஆலோசகர் பதவியை ஏற்பாரா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இன்னொரு பக்கம் தோனி மற்றும் சிஎஸ்கே இடையிலான உறவு முடிவுக்கு வந்துவிட்டதா என்ற குழப்பமும் ஏற்பட்டுள்ளது. இதுதொடர்பாக இன்னும் சில நாட்களில் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியாகும் என்றும் பார்க்கப்படுகிறது.