மதுரை மீனாட்சி அம்மன் கோவில் அருகே வடக்கு ஆவணி மூல வீதி பகுதியில் மாநகராட்சிக்கு சொந்தமான கார் பார்க்கிங் செயல்பட்டு வருகிறது. இங்கு நேற்று நள்ளிரவு குபேந்திரன் என்ற சிறுவனை பைக்கில் வந்த கும்பல் ஒன்று சரமாரியாக வெட்டிப்படுகொலை செய்து விட்டு தப்பியோடினர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த விளக்குத்தூண் காவல்துறையினர் அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
இதில் கடந்த மாதம் சித்திரை திருவிழாவின் போது கொலை செய்யப்பட்ட சிறுவன் குபேந்திரனுக்கும் அதே பகுதியை சேர்ந்த முத்துமணி என்ற தொத்தல் முத்துமணி என்பவருக்கும் மோதல் ஏற்பட்டுள்ளது.
அப்போது இருவரும் ஒருவரை ஒருவரை கடுமையாக தாக்கியபோது முத்துமணிக்கு காயம் ஏற்பட்டுள்ளது.
இதனால் ஆத்திரமடைந்த முத்துமணி தனது காயம் ஆறுவதற்குள் சிறுவன் குபேந்திரனை கொலை செய்துவிட வேண்டுமென திட்டம் தீட்டியுள்ளனர்.

இந்நிலையில் நேற்றிரவு சிறுவன் குபேந்திரன் மீனாட்சியம்மன் கோவில் கார் பார்க்கிங் அருகே நின்றபோது அங்கு 2 பைக்குகளில் வந்த முத்துமணி மற்றும் அவனது தம்பி ராஜ் மற்றும் சதீஷ்குமார் ,ஹரி கிருஷ்ணன், முத்துக்குமார் ஆகிய 5 பேர் கொண்ட கும்பல் குபேந்திரனை சராமாரியாக வெட்டியுள்ளனர்.
அப்போது குபேந்திரன் ஓட முயற்சித்தபோதும் விரட்டி வெட்டிப்படுகொலை செய்துள்ளனர். இதனால் சம்பவ இடத்திலயே குபேந்திரன் உயிரிழந்துள்ளார். பின்னர் கொலை செய்த கும்பலானது அங்கிருந்து தப்பியோடியதும் தெரியவந்துள்ளது