பேய், அமானுஷ்யம், கடவுளின் சாபம் என்று தொடங்கி, பின்னர் முழுநீள விசாரணை த்ரில்லராக மாறும் படத்தை முடிந்தளவு கரையேற்றப் போராடியிருக்கிறார் அறிமுக இயக்குநர் பாலாஜி. கதையாக இதை எழுதிய விதம் பாராட்ட வைத்தாலும் அதைத் திரைக்கதையாக மாற்றுவதில் போதாமைகளும் குழப்பங்களுமே எட்டிப் பார்க்கின்றன.
பேய், சாபத்தை நம்பும் மக்கள், பகுத்தறிவுவாதியாக நாயகன் என்ற காம்போ தொடக்கத்தில் ஆர்வத்தைத் தூண்டுகிறது. காணாமல் போனவர் பற்றிய விசாரணைக் காட்சிகள், அதன்பிறகு நிகழும் தொடர் கொலைகள் என அந்த எபிசோடே நன்றாக எழுதப்பட்டு எடுக்கப்பட்டு இருப்பது நம்மை நிமிர்ந்து உட்கார வைக்கிறது. ஆனால், அங்கே கிடைத்த வேகத்தை இரண்டாம் பாதியில் தொலைக்கிறது திரைக்கதை.
நடக்கவிருப்பதைச் சொல்லும் அமானுஷ்ய புத்தகம், பெண் கடவுளின் சாபம் என்றெல்லாம் எதிர்பார்ப்பைக் கிளப்பிவிட்டு, அந்தப் பக்கமே செல்லாமல் சாதாரண ட்விஸ்ட்களை அடுக்கி த்ரில்லைக் காலி செய்கிறது படம். கொலையாளி(கள்) யார் என்று வெளிப்படும் இடமும் எந்தவித அதிர்ச்சியோ, ஆச்சர்யத்தையோ கடத்தவில்லை என்பது ஏமாற்றமே!
அந்தப் புத்தகம், அதனுடன் முன்கதையாகச் சொல்லப்பட்ட சில விஷயங்கள் இந்தப் படத்துக்கு எதற்கு, கொலையாளிக்குத் தொடர்புடைய ஒரு பாத்திரம் உண்மையில் இறந்தது எப்படி, கொலையாளிகள் வித்தியாச முகமூடி அணிந்துவந்து, வயலின் வாசித்துக் கொல்வதற்கான காரணம் என்ன எனப் பல கேள்விகளுக்கு விடைகளில்லை. எல்லாவற்றுக்கும் இரண்டாம் பாகத்தில் விடை என்று சொல்லுவது போங்காட்டமே!
நல்லதொரு கதைக் களமும், துப்பறியும் படலமும் இருந்தாலும், இரண்டாம் பாதியின் தடம் புரளலால் வெளிச்சம் தராமலே ஏமாற்றியிருக்கிறது இந்த ‘தி டார்க் ஹெவன்’.