International
oi-Vigneshkumar
இஸ்லாமாபாத்: பஹல்காம் தாக்குதலுக்குப் பிறகு இந்தியா பாகிஸ்தான் இடையே நிலைமை மீண்டும் மோசமாகி இருக்கிறது. இதற்கிடையே சிந்து நதி நீரைத் தடுத்தால் இந்தியா மீது போர் தொடுக்கவும் பாகிஸ்தான் ரெடியாக இருப்பதாக அந்நாட்டின் பாதுகாப்புத் துறை அமைச்சர் கவாஜா ஆசிப் சர்ச்சை கருத்துகளைக் கூறியிருக்கிறார். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியா பாகிஸ்தான் இடையே எப்போதும் சுமுகமான உறவு இருந்ததே இல்லை. எல்லை தாண்டிய தீவிரவாதத்தைப் பாகிஸ்தான் ஊக்குவிப்பதே இதற்கு முக்கிய காரணமாகும். பாகிஸ்தான் ஒவ்வொரு முறையும் வாலாட்டும் போதும் இந்தியா தக்க பதிலடி கொடுத்தே வந்துள்ளது. ஆனாலும், பாகிஸ்தான் திருந்துவது போலத் தெரியவில்லை.

போர் தொடுப்போம்
இதற்கிடையே பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் கவாஜா ஆசிப், தேவையில்லாமல் இந்தியாவை வம்பிழுக்கும் வகையில் சர்ச்சை கருத்துகளைக் கூறியிருக்கிறார். அதாவது இந்தியாவின் நடவடிக்கைகள் தங்களது நாட்டின் நீர் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக அமைந்தால், இந்தியாவுக்கு எதிராகப் போர் தொடுக்கவும் தயங்க மாட்டோம் என்று வாயை விட்டுள்ளார்.
பாகிஸ்தானில் உள்ள தனியார் செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில், தண்ணீர் என்பது தங்களது நாட்டின் மிக முக்கியமான தேசிய பாதுகாப்பு அம்சம் என்றும், அதில் பாதிப்பு ஏற்பட்டால் நிச்சயம் ராணுவ ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் சர்ச்சைக்குரிய வகையில் பேசியுள்ளார்.
பின்னணி என்ன!
மத்திய ஜல் சக்தி துறை அமைச்சர் சி.ஆர். பாட்டீல், 2028-ம் ஆண்டு ஜூன் மாதத்திற்குள் பாகிஸ்தானுக்குச் செல்லும் சிந்து நதி நீரை முழுமையாக நிறுத்த வாய்ப்புள்ளதாகக் குறிப்பிட்டிருந்தார். இந்த வீடியோ இணையத்தில் டிரெண்டானது. அப்படிச் சிந்து நதி நீர் தடுத்து நிறுத்தப்பட்டால் பாகிஸ்தான் மிக மோசமான நிலைக்குத் தள்ளப்படும். பாகிஸ்தான் பொருளாதாரமே சிந்து நதி நீரை நம்பி இருக்கும் சூழலில், அது கடுமையாகப் பாதிக்கப்படும்.
பாட்டீலின் இந்த பேச்சு பாகிஸ்தான் தரப்பில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதன் காரணமாகவே கவாஜா ஆசிப் இதுபோல சர்ச்சை கருத்துகளைக் கூறியிருக்கிறார். தண்ணீர் என்பது வாழ்வாதாரம் என்றும், அதை இந்தியா பறிக்க முயல்வதாகவும், அத்தகைய சூழலில் தங்களுக்குப் போர் ஒன்றே வழியாக இருக்கும் என்றும் கவாஜா ஆசிப் தனது உரையில் குறிப்பிட்டுள்ளார்.
நிறுத்தி வைக்கப்பட்டது ஏன்!
இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே 1960ம் ஆண்டு உலக வங்கியின் முன்னிலையில் சிந்து நதி நீர் ஒப்பந்தம் கையெழுத்தானது. பல ஆண்டுகளாகப் பின்பற்றப்பட்டு வந்த இந்த ஒப்பந்தத்தில், கடந்த 2025ம் ஆண்டு ஏப்ரல் மாதம் முடிவுக்கு வந்தது. ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்டனர். பாகிஸ்தான் ஆதரவு பெற்ற பயங்கரவாதிகளே இதற்குக் காரணமாக இருந்தனர்.
இதன் காரணமாகவே சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை இந்தியா நிறுத்தி வைத்தது. எல்லை தாண்டிய பயங்கரவாதத்தைப் பாகிஸ்தான் முழுமையாக நிறுத்தும் வரை இந்த ஒப்பந்தம் நிறுத்தி வைக்கப்படுவதாக இந்தியா அறிவித்தது.
சிந்து நதி நீர் ஒப்பந்தம்
சிந்து நதி நீர் ஒப்பந்தத்தின்படி, இந்த நதி அமைப்பின் சுமார் 80 சதவீத நீர் பாகிஸ்தானுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தானின் விவசாயம், நீர்ப்பாசனம் மற்றும் ஒட்டுமொத்த பொருளாதாரத்திற்கு இந்த நதி நீரே முதுகெலும்பாக உள்ளது. தற்போது பாகிஸ்தான் ஏற்கனவே கடுமையான தண்ணீர் தட்டுப்பாட்டை எதிர்கொண்டு வரும் நிலையில், இந்தியா நீரோட்டத்தைத் தடுத்தால் அது பாகிஸ்தான் முதுகெலும்பை உடைக்கும். இதனால் தான் பாகிஸ்தான் இந்த விவகாரத்தில் பதறி வருகிறது.
பாகிஸ்தான் முயற்சி
இந்த விவகாரத்தில் சர்வதேச நாடுகளிடம் எடுத்துச் செல்ல பாகிஸ்தான் தீவிரமாக முயன்று வருகிறது. பாகிஸ்தான் துணைப் பிரதமர் இஷாக் தார், இந்த விவகாரத்தில் ஐநா பாதுகாப்பு கவுன்சில் தலையிட வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார். மேலும், செனாப் நதியில் இந்தியா ஒரு நதி நீர் இணைப்புத் திட்டத்தைச் செயல்படுத்த முயல்வதாகவும், இது சர்வதேச விதிகளுக்கு எதிரானது என்றும் பாகிஸ்தான் குற்றம் சாட்டியுள்ளது. பருவநிலை மாற்றம் மற்றும் தண்ணீர் பற்றாக்குறை காரணமாக ஏற்கனவே தவித்து வரும் பாகிஸ்தானுக்கு, இந்த நதி நீர் விவகாரம் ஒரு மிகப் பெரிய சவாலாக மாறியுள்ளது.