சிரிப்புச் செடி… சிந்தனை மரம்! | My Vikatan article about actor Vivek

Spread the love

மூடநம்பிக்கை எனும் மைல்கல்!

விவேக்கின் நகைச்சுவை என்பது வெறும் சிரிப்பல்ல, அது ஒரு பகுத்தறிவு அறுவை சிகிச்சை. சாலையில் கிடக்கும் ஒரு சாதாரண ‘மைல்கல்’ (Kilometre stone)-க்கு யாரோ ஒருவர் மஞ்சள் துணியைச் சுற்ற, அதை ‘குலதெய்வம்’ என நினைத்து ஊரே கும்பிடும். அப்போது விவேக் வருவார்… “டேய்… இது எவ்ளோ தூரம்னு காட்டுற கல்லுடா!” என்று அந்த மூடநம்பிக்கையின் முகத்திரையைக் கிழிப்பார்.

மஞ்சள் துணி போர்த்தினால் எதையும் தெய்வமாக்கிவிடும் நமது அறியாமையை, அந்த ஒற்றை நகைச்சுவைக் காட்சி மூலம் அவர் வெளிச்சம் போட்டுக் காட்டினார். இதுதான் விவேக் பாணி; சிரிப்புச் செடியை நட்டுக்கொண்டே சிந்தனை மரத்தை வளர்ப்பது!

நடிகர் விவேக்

நடிகர் விவேக்

ஒரு கோடி கனவு: மரங்களை நேசித்த மனிதன்

இந்திய சினிமா வரலாற்றில் ஒரு நடிகர், தன் ரசிகர்களை மரம் நடச் சொல்லி ஒரு ‘பசுமைப் புரட்சியை’ முன்னெடுத்தது விவேக் அவர்களால் மட்டும்தான் சாத்தியமானது. அப்துல் கலாம் ஐயாவின் மீது அவர் வைத்திருந்த பற்று, அவரை ஒரு சமூகத் தூதுவனாக மாற்றியது. இன்று கோடை வெயிலின் உச்சத்தில், எங்கோ ஒரு சாலையோரத்தில் அடர்த்தியான மர நிழலில் ஒதுங்கும் வழிப்போக்கன், அறியாமலேயே விவேக்கிற்கு ஒரு நன்றியைச் சொல்லிக் கொண்டிருக்கிறான். மௌனமான நந்தவனம்…

விவேக்கின் தனிப்பட்ட வாழ்க்கை பெரும் சோகங்களைச் சுமந்தது. தன் ஒரே மகனை இழந்த போதும், அந்தத் துயரத்தை வெளியே காட்டாமல் ஊருக்காகச் சிரிப்பை விநியோகித்த அந்த ‘மகா கலைஞன்’, தன் ஆழ்ந்த சோகத்தை மறைக்கத்தான் அத்தனை மரங்களை நட்டாரோ என்னவோ? ஒவ்வொரு மரமும் அவருக்கு ஒரு குழந்தையைப் போலத்தான் இருந்தது.

 நிழல் தரும் நினைவுகள்!

ஏப்ரல் 17, 2021. இந்தத் தேதியில் ஒரு பெரும் சிரிப்புச் சத்தம் மௌனமானது. ஆனால், மரங்கள் சாய்வதில்லை; அவை விதைகளாக மாறுகின்றன. விவேக் என்ற மரம் இன்று நம்மிடையே இல்லை. ஆனால், அவர் நட்டுச் சென்ற லட்சக்கணக்கான மரங்களும், அவர் விதைத்த பகுத்தறிவுச் சிந்தனைகளும் இன்றும் வளர்ந்து கொண்டே இருக்கின்றன.

இனிமேல் நீங்கள் ஒரு மரத்தின் நிழலில் ஒதுங்கும் போது கவனித்துப் பாருங்கள்… அந்த இலைகளின் அசைவில் விவேக்கின் அந்தத் தத்துவச் சிரிப்பு நிச்சயம் ஒலிக்கும்!

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *