மத்தியப் பிரதேச மாநிலம் சத்னா மத்திய சிறையில் சிறை அதிகாரியாக இருப்பவர் பெரோஷா. இப்பெண் ஜெயிலராக சிறையில் பணியாற்றியபோது கொலை வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்து வந்த தர்மேந்திரசிங் என்பவரைச் சந்தித்தார்.
தர்மேந்திர சிங்கிற்கு சிறையில் கைது வாரண்ட் தொடர்பான பணிகள் வழங்கப்பட்டு இருந்தது. இதனால் இருவரும் அடிக்கடி சந்திக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. இதனால் இருவருக்கும் இடையே ஆரம்பத்தில் நட்பு ஏற்பட்டது.
இந்த நட்பு நாளடைவில் அவர்களுக்குள் காதலாக மாறியது. 14 ஆண்டுகள் சிறையில் இருந்த தர்மேந்திர சிங் நன்னடத்தைக் காரணமாக கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டார்.

இதையடுத்து அவர்களது காதல் தொடர்ந்து எந்த வித தடையும் இன்றி நடந்துகொண்டிருந்தது. ஆனால் இக்காதலுக்கு மதம் பிரச்னையால் பெரோஷாவின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். அவர்களின் தடையை மீறி இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தனர்.
இத்திருமணத்திற்கு பெண் வீட்டில் இருந்து யாரும் வரவில்லை. இதையடுத்து விஷ்வ இந்து பரிஷத் மாவட்ட துணைத்தலைவர் மிஸ்ராவும், அவரது மனைவியும் முன்னின்று இத்திருமணத்தை நடத்தி வைத்தனர்.
இத்திருமணத்தில் பஜ்ரங் தளம் மற்றும் விஷ்வ இந்து பரிஷத் தொண்டர்கள் மற்றும் சிறை ஊழியர்கள் திரளாகக் கலந்து கொண்டனர். ஆயுள் தண்டனை கைதியை சிறை அதிகாரியே திருமணம் செய்து கொண்டது மத்தியப் பிரதேசத்தில் பெரிய அளவில் பேசப்பட்டு வருகிறது.
இரண்டு நாட்களுக்கு முன்பு அவர்களுக்கு திருமணம் நடந்தது. எதுவும் பிரச்னை ஏற்படக்கூடாது என்பதற்காக இது குறித்து மணமகன் தரப்பில் யாரிடமும் சொல்லாமல் ரகசியமாக வைத்திருந்தனர்.