குடும்பத் தகராறு, ரவுடிகளுக்கிடையேயான முன்விரோதம், போதை மற்றும் எல்லை மீறிய கோபம் என வெவ்வேறு பின்னணிகளில் நடந்த 3 கொடூரக் கொலையால் சிவங்கை மாவட்டமே அதிர்ச்சியில் உறைந்து போயுள்ளது.
“சிறையிலிருந்து வெளியே வர உதவவில்லை” – மனைவியை வெட்டிச் சாய்த்த கணவன்
சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தை அடுத்துள்ள சொட்டாத்தட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் யோகராஜன் என்ற கருவாயன் (29). கூலித் தொழிலாளியான இவர் மீது ஏற்கெனவே சில குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன.
வழக்கு ஒன்றில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட யோகராஜனை, அவரது மனைவி பாண்டிச்செல்வி (25) பணப் பற்றாக்குறை மற்றும் குடும்பச் சூழல் காரணமாக ஜாமினில் எடுக்க முயலவில்லை எனக் கூறப்படுகிறது.
வழக்கு விசாரணைக்குப் பின் சொந்த முயற்சியில் ஜாமினில் வெளியே வந்த யோகராஜன், தன் மனைவி மீது கடும் ஆத்திரத்தில் இருந்துள்ளார். மதுபோதையில் வீட்டிற்கு வந்த யோகராஜன், “நான் உள்ளே இருக்கும்போது என்னை வெளியே எடுக்க என்ன நடவடிக்கை எடுத்தாய்?” என்று கேட்டு பாண்டிச்செல்வியிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார்.
வாக்குவாதம் முற்றிய நிலையில், ஆத்திரம் தாங்காத யோகராஜன் வீட்டில் இருந்த கூர்மையான அரிவாளை எடுத்து பாண்டிச்செல்வியைச் சரமாரியாக வெட்டியுள்ளார். இதில் படுகாயமடைந்த பாண்டிச்செல்வி சம்பவ இடத்திலேயே இரத்த வெள்ளத்தில் பரிதாபமாக உயிரிழந்தார்.
இச்சம்பவம் குறித்து திருப்புவனம் போலீசார் வழக்குப் பதிவு செய்து யோகராஜனைக் கைது செய்துள்ளனர்.
A+ பிரிவு சரித்திரப் பதிவு ரவுடி: ஊர்காவலன் படுகொலை – பழிக்கு பழியா?
திருப்பாச்சேத்தி அருகேயுள்ள மைக்கேல்பட்டினத்தைச் சேர்ந்தவர் ஊர்காவலன் (31). இவர் தென் மாவட்டங்களில் அறியப்பட்ட பிரபல ரவுடி. இவர் மீது 3 கொலை வழக்குகள், 2 கொலை முயற்சி வழக்குகள், கஞ்சா கடத்தல், மாமூல் வசூல் உட்பட 33-க்கும் மேற்பட்ட குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன. காவல்துறையின் ஏ பிளஸ் சரித்திரப் பதிவேடு குற்றவாளியாகப் பட்டியலிடப்பட்டவர்.
சமீபத்தில் போலீசாரைப் பிணையாளியாகப் பிடித்து தாக்குதல் நடத்த முயன்றபோது, காவல்துறையினரால் காலில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டு கைது செய்யப்பட்டவர் ஊர்காவலன். ஜாமினில் வந்து சில நாட்களே ஆன நிலையில், இவர் தன் வீட்டின் அருகே நின்றுகொண்டிருந்தார்.
அப்போது, இரண்டு இருசக்கர வாகனங்களில் வந்த 5-க்கும் மேற்பட்ட மர்ம நபர்கள், ஊர்காவலனைச் சுற்றி வளைத்து அரிவாள் மற்றும் வாள்களால் சரமாரியாக வெட்டினர். அவர்களிடம் இருந்து தப்பிக்க முயன்ற ஊர்காவலன், இரத்தக் காயங்களுடன் ஓடி வீட்டிற்குள் புகுந்தபோதும் விடாமல் துரத்திச் சென்று வெட்டிக் கொன்றுவிட்டு தப்பினர்.

எதிர்த்தரப்பு ரவுடி கும்பலுடன் இருந்த நீண்ட காலப் பகை மற்றும் பழிவாங்கும் நடவடிக்கை காரணமாகவே இந்தக் கொலை நடைபெற்றிருக்கலாம் எனக் கருதப்படுகிறது. கொலையாளிகளைப் பிடிக்க திருப்பாச்சேத்தி காவல்துறை தனிப்படை அமைத்துத் தீவிரமாகத் தேடி வருகிறது.
“பழைய சோறு போட்டதால் ஆத்திரம்” – மனைவியை அடித்துக் கொன்ற கொடுமை!
காரைக்குடி அருகேயுள்ள கோட்டையூரைச் சேர்ந்தவர் பிரசாந்த் (35). கூலித் தொழிலாளியான இவருக்கு முதல் திருமணம் விவாகரத்தில் முடிந்தது. இதையடுத்து, புதுவயல் அண்ணா நகரைச் சேர்ந்த உய்யம்மாள் (42) என்பவரை இரண்டாவதாகத் திருமணம் செய்து கொண்டு வசித்து வந்தார்.
சம்பவத்தன்று மதியம் வேலை முடிந்து வீட்டிற்கு வந்த பிரசாந்த், உணவு கேட்டுள்ளார். அப்போது வீட்டில் சமைத்த உணவு இல்லாததால், உய்யம்மாள், வீட்டில் இருந்த பழைய சோற்றைப் பரிமாறியதாகக் கூறப்படுகிறது.
ஏற்கனவே மதுபோதையில் இருந்த பிரசாந்திற்கு இது கடும் ஆத்திரத்தை ஏற்படுத்தியது. “சூடான உணவு கூடச் சமைத்து வைக்கமாட்டாயா?” என்று கூறி உய்யம்மாளிடம் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். ஆத்திரத்தின் உச்சத்தில் உய்யம்மாளைக் கொடூரமாகத் தாக்கி, சுவரில் பிடித்துத் தள்ளியுள்ளார்.
இதில் தலையில் பலத்த காயமடைந்த உய்யம்மாள், ரத்த வெள்ளத்தில் மயங்கி விழுந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். சாக்கோட்டை காவல்துறையினர் பிரசாந்த்தைக் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
அடுத்தடுத்து 18 மணி நேர இடைவெளியில் நடந்த இந்த 3 தொடர் கொலைச் சம்பவங்களால் சிவகங்கை மாவட்டமே அதிர்ச்சியில் உறைந்துள்ளது. பொதுமக்களிடையே அச்சத்தைப் போக்க காவல்துறை ரோந்துப் பணிகளைப் பலமடங்கு தீவிரப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.