விசிக-வினர் சாலை மறியல்; கடக்க முயன்ற இளைஞர் – தாக்கிய போலீஸை திருப்பி அடித்த இளைஞர்; நடந்தது என்ன?

Spread the love

தஞ்சாவூர் மாநகராட்சி சார்பில் ரயிலடி உள்ளிட்ட பகுதிகளில் அனுமதியின்றி வைக்கப்பட்ட ஃப்ளக்ஸ் பேனர்கள் அகற்றப்பட்டது. இதில் விசிக தலைவர் திருமாவளவன் பிறந்தநாள் மற்றும் அக்கட்சி மாநாட்டிற்காக நிர்வாகிகள் வைத்திருந்த ஃப்ளக்ஸும் அகற்றப்பட்டது. இதையறிந்த விசிக-வினர் அகற்றிய ஃப்ளக்ஸை மீண்டும் அதே இடத்தில் வைக்க வலியுறுத்தி மாநகராட்சி அலுவலகம் எதிரே சாலை மறியல் போராட்டம் நடத்தினர்.

அப்போது அவ்வழியாக விளார் பகுதியைச் சேர்ந்த ஆகாஷ்(26) இவரை தொடர்ந்து திருக்கனூர்பட்டியைச் சேர்ந்த ஐயப்பன்(27) ஆகிய இரண்டு இளைஞர்கள் தனி தனியாக டூவீலரில் வந்தனர்.

இளைஞரை இழுத்துச் செல்லும் போலீஸ்

இதனால் ஆகாஷ்க்கும் விசிக-வினருக்கும் இடையே வாக்கு வாதம் ஏற்பட்டது. சாலை மறியலை தடுக்க வந்த போலீஸார் மோதல் ஏற்படாமல் தடுக்க ஆகாஷிடம் பேசியுள்ளனர். `நான் அவசரமாக போக வேண்டும் என்னை மறித்து வைத்துள்ளீர்கள், என் மேல் என்ன தப்பு இருக்கு?’ என போலீஸிடம் கேட்டுள்ளார்.

இதில் பணியில் இருந்த போலீஸ் சிறப்பு உதவி ஆய்வாளர் அப்துல்ரஹீம் ஆகாஷிடம் முறையாக பேசவில்லை என்கிறார்கள். மேலும் அப்துல்ரஹீம் ஆகாஷிடம் அடித்து விடுவேன் என்று சொல்ல அடி பார்க்கலாம் என ஒருமையில் ஆகாஷ் பேசியிருக்கிறார்.

உடனே, அப்துல்ரஹீம் ஆகாஷ் கன்னத்தில் அறைந்து விடுகிறார். இதையடுத்து ஆகாஷ் அப்துல்ரஹீமை திருப்பி கன்னத்தில் அறைந்து விடுகிறார். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதைதொடர்ந்து அங்கிருந்த போலீஸார் ஆகாஷை வண்டியில் இருந்து இறங்க சொல்ல அவர் மறுத்தார். பின்னர் வலுக்கட்டாயமாக இழுக்க டூவீலருடன் ஆகாஷ் விழுந்து விடுகிறார். பின்னர் ஒரு போலீஸ் அவரை கழுத்தில் கை வைத்து இழுத்து நிமிர்த்தினார்.

விசிக-வினர் வாக்குவாதம்

திமிறிய ஆகாஷை கழுத்தில் கை வைத்து அழுத்தி குண்டுகட்டாக தள்ளி போலீஸ் வாகனத்திற்குள் ஏற்றினர். இந்த விவகாரத்தில் ஆகாஷ், உடன் வந்த ஐயப்பன் இருவரையும் கைது செய்து காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதுகுறித்து பேசிய அப்பகுதியினர், இன்று பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக துணை ஜனாதிபதி வந்திருந்த நிலையில் பெரும்பாலான போலீஸார் பாதுகாப்பு பணிக்கு சென்று விட்டதாக போலீஸ் தரப்பில் சொல்லப்பட்டது.

இந்நிலையில் விசிக-வினர் திடீரென சாலை மறியல் போராட்டம் நடத்தினர். இதனை அங்கிருந்த போலீஸார் முறையாக கையாளவில்லை. அப்போது இரண்டு இளைஞர்களும் போராட்டம் நடந்த இடத்தை கடக்க முயன்றுள்ளனர். முதலில் வந்த ஆகாஷ் நான், தாலுகா ஆபிஸ்க்கு அவசரமாக செல்கிறேன் என்றுள்ளார். பாதுகாப்பு பணியில் இருந்த போலீஸ் ஆகாஷிடம் முறையாக பேசி என்னவென்று விசாரித்து அனுப்பியிருக்க வேண்டும். அப்படி செய்யவில்லை. ஆனால் சட்டையை பிடித்து இழுத்தனர்.

போலீஸார் இளைஞர்

பின்னர், சிறப்பு உதவி ஆய்வாளர் அப்துல் ரஹீம் ஆகாஷை அடிக்க பதிலுக்கு அவரும் அறைந்து விடுகிறார். போலீஸை அடித்தது தவறுதான். ஆனால் முறையாக கையாளமல் அத்தகைய சூழலை ஏற்படுத்தும் நிலைக்கு போலீஸ் தான் கொண்டு சென்றனர். அதுவும் போலீஸ் ஜீப்பில் ஏற்றும் போது போலீஸார் ஆகாஷிடம் நடந்து கொண்டது சரியானதல்ல. அங்கிருந்த பலரும் இளைஞர்களுக்கு ஆதரவாகவே பேசி வருகின்றனர்.

இதுகுறித்து வீடியோ சமூக ஊடகங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. போலீஸ் உயர் அதிகாரிகள் இதில் முறையாக விசாரணை நடத்தி இளைஞர்களின் எதிர்காலம் பாதிக்காத வண்ணம் அதே நேரத்தில் எச்சரித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்கிறார்கள்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *